தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 29-01-2023

1 பேதுரு 1 : 16 ” நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. “

மேற்கூறிய வசனத்திலிருந்து பரிசுத்தம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ளலாம்.

எண்ணாகமம் 20 : 12

” பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி : இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக , என்னை பரிசுத்தம் பண்ணும்படி , நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.”

இந்த வசனங்கள் நமக்கு , மோசேயும் ஆரோனும்  கர்த்தரை நம்பவில்லை எனவே அவர்கள் கர்த்தரால் அனுமதிக்கப்படவில்லை என்பதை தெளிவாகச் சொல்கிறது. மோசேயும் எல்லா இஸ்ரவேலர்களும் கானானுக்குப் போகும் வழியில் மோசேயிடமும் ஆரோனிடமும் தண்ணீர் கேட்டு அவர்களுக்கு எதிராக புகார் செய்தார்கள். அதன் விளைவாக மோசேயும்  ஆரோனும் கர்த்தரிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தர் அவர்களது வேண்டுகோளுக்கு செவிமடுத்து , மோசேயின் கோலை எடுத்து பாறையிடம் பேசும்படி  சொன்னார்.

எண்ணாகமம் 20 : 8

” நீ கோலை எடுத்துக் கொண்டு , நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரை கூடி வரச் செய்து , அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்து பேசுங்கள் , அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும் , இப்படி நீ அவர்களுக்கு கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி , சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். “

எண்ணாகமம் 20 : 10 – 11

” மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச் செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி கலகக்காரரே, கேளுங்கள் , உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா என்று சொல்லி தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான் . உடனே தண்ணீர் புறப்பட்டது . சபையார் குடித்தார்கள், அவர்கள் மிருகங்களும் குடித்தது.

மோசே கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்படியவில்லை ,  பாறையிடம் பேசுவதற்குப் பதிலாக இரண்டுமுறை தட்டினான். இரண்டாவதாக அவர் இஸ்ரவேலர்களை கலகக்கார தேசம் என்று குறிப்பிட்டார். இஸ்ரவேலர்களுக்கு முன்பாக அவர்களுக்கு இரக்கம் காட்டியதற்காக மோசே கர்த்தருக்கு நன்றி செலுத்தவில்லை. அவர்களுக்கு இரக்கமோ அல்லது அவர்களை மன்னிக்கும் தன்மைமையையோ காட்டவில்லை. இதுவே கர்த்தருக்கு மோசே மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.  எனவே கர்த்தரின் வழிகாட்டுதல்களை முழுமையாக சார்ந்திருந்த யோசுவா மற்றும் காலேப்பை  இஸ்ரவேலர்களின் தலைவர்களாக தேர்ந்தெடுத்தார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு ஒருபோதும் எந்த அற்புதத்தின் புகழையும் தாம் எடுத்துக்  கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் அற்புதத்தை தேடும்  மனிதனுடைய விசுவாசத்திற்கும் கர்த்தருக்குமே அந்த புகழை கொடுத்தார். இயேசு எப்போதும் கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றியே போதித்தார். கர்த்தருடைய நீதியையும் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றும் இயேசு போதித்தார். உதாரணமாக இயேசு மரியாளின் சகோதரனாகிய லாசரை உயிர்ப்பித்தபோது , முதலில் பிதாவிடம் ஜெபித்தார், பின்னர் அவரை எழுப்பும்படி கேட்டார். அவ்வாறே நாமும் நம்மைத் தாழ்த்தி நன்றியுள்ள இதயத்துடன் ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்

பிதாவே, உம்மிடம் எப்படி பேசுவது , உம்மிடம் எப்படி ஜெபிப்பது என்பதை எங்களுக்கு காட்ட உமது மகன் இயேசுவை அனுப்பியதற்கு நன்றி செலுத்துகிறோம். தயவோடு பிறருக்காக பரிந்து பேசுவதை இயேசு நமக்கு காட்டினார். மற்றவர்களிடம் பணிவாகவும் அன்பாகவும் இருக்க எங்களுக்கு உதவும்படி  இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. குஷி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-01-2023

மன்னித்தல்


மத்தேயு 6 : 14
” மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் , உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். “


மன்னித்தல் என்பது ஒரு குற்றவாளியை மன்னிக்கும் செயலாகும். மன்னிப்பு என்பது விடுதலை என்று பொருள்படும். தன்னலமற்ற அன்பே உண்மையான அன்புக்கு அடிப்படையாகும். ஏனெனில் அது தவறுகளை பதிவு செய்யாது.
மற்றவர்களை மன்னிப்பது என்பது மனக்கசப்பை கைவிடுவது மற்றும் நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடு செய்வதற்கான எந்த ஒரு கோரிக்கையையும் கைவிடுவதாகும்.


கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதும் மன்னிப்பை பற்றியதாகும். இது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் வழியாகவும் அவருடைய சிலுவை மரணத்தின் வழியாகவும் கர்த்தருடைய மன்னிப்பை பெறுவதில் தொடங்குகிறது. அந்த மன்னிப்பில் நாம் வாழும்போதும் , தினம்தோறும் பரலோகத் தந்தையிடம் அவற்றைப் பெற்று மற்றவர்களுக்கு இலவசமாக பகிரந்தளிக்கும் போது அது தொடர்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் அதைச் செய்யவில்லையென்றால் , கர்த்தர் நம்மை எவ்வளவு மன்னித்திருக்கிறார் என்பதை உண்மையில் நாம் புரிந்து கொண்டோமா என்பது சந்தேகமே. மனிதர்கள் இயற்கையிலே பாவிகள் என்பதையும் , கர்த்தர் நம் பாவங்களை மன்னிக்க , இயேசு நமக்காக மரிக்க வேண்டும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும் அந்த வீரர்களுக்காக கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டார்.


லூக்கா 23 : 24 “இயேசு பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் “. இங்கே இயேசு தன்னை மிக மோசமாக துன்புறுத்தியவர்களுக்காக முறையிட்டு தன்னுடைய இறுதி மன்னிப்பை காட்டுகிறார்.


உண்மையாக, மனிதர்கள் தம்மை துன்புறுத்திய மக்களை மன்னிக்க போராடுகிறார்கள். அன்பற்ற வார்த்தைகளுடன் மட்டுமே இருக்கிறார்கள். நம் சொந்த கொலையாளிகளை மன்னிப்பதை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? சரி. நாம் கிறிஸ்து அல்ல.

ஆனால் நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னிக்க கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.தகுதியில்லாதவர்களுக்கு இரக்கத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட சட்டங்களை தர விரும்புகிறார். மன்னித்தல் என்பது விருப்பம் அல்ல. அது ஒரு கட்டளை.


கொலோசையர் 3 : 13
” ஒருவரையொருவர் தாங்கி ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால் , கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். “
மன்னித்தல் என்பது நமது சொந்த ஆரோக்கியத்திற்கும் கர்த்தருடனான நமது உறவுக்கும் அவசியம். மன்னிப்புக்கு சரியான முன்மாதிரியைக் கர்த்தர்
கொடுத்தார்.

மன்னிப்பதனால் அது நமக்கு காயம் இல்லை என்றோ, அது நமக்கு ஒரு பொருட்டல்ல என்றோ அல்லது எல்லாவற்றையும் அது சரியாக்கும் என்றோ அல்ல. மாறாக காயத்தை விட்டுவிடவும் உங்களை காயப்படுத்தியவரை கர்த்தர் கையாளவும் அனுமதிக்கிறது. மன்னித்தல் நம்மை பிரச்சனைகளிலிருந்து விடுதலையாக்கி நம் வாழ்க்கையை தொடர அனுமதிக்கிறது. இது எப்போதும் எளிதான காரியம் அல்ல. ஆனால் நம்மை காயப்படுத்தியவர்களை மன்னிப்பதே நாம் நமக்காக செய்யும் ஆரோக்கியமான விஷயமாகும்.


கர்த்தர் நம்மை மன்னிப்பை செயல்படுத்த விரும்புகிறார். இதனால் கர்த்தருக்காக வாழ தேவைப்படும் மிகச்சிறந்த திறனை பெற முடியும். மன்னிப்பு என்பது கர்த்தரின் அன்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பு மற்றும் அர்ப்பணிப்பு.
நாம் ஜெபத்திற்கு பதிலளிக்கப்படுவதில் ஆர்வமாக இருந்தால் , மன்னிக்கவும், பின்னால் இருப்பதை நாம் விட்டுவிடாத வரை , முன்னால் இருப்பதை நம்மால் பிடிக்க முடியாது.


நம்மை காயப்படுத்திய எவரையும் மன்னிக்கும் கிருபையை நாம் தினமும் கர்த்தரிடம் கேட்க வேண்டும்.
கசப்புடன் நாம் வாழ மறுத்துவிடுங்கள் ; நம் இதயச் சிறையிலுள்ள குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள்.

ஜெபம்:
தந்தையே, என்னை புண்படுத்தியவர்களை மன்னிக்க கிருபைபுரியும்படி வேண்டுகிறேன். என் வாழ்க்கையில் எல்லாவிதமான பலன்களையும் தரவேண்டுமென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. பியானா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-01-2023

கர்த்தர் மீதுள்ள பயம்

கர்த்தர் மீதுள்ள பயம் நேர்மறைத் தன்மையாக  வாழ்வின் ஆசீர்வாதங்களுக்கான முக்கிய வாசலாக மாறுகிறது. அதே சமயம் கர்த்தர் மீது பயமில்லாமல் இருப்பது எதிர்மறையாக நமது வாழ்வில் சாபங்களுக்கு முக்கிய வாசலாக மாறுகிறது.

கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் மாறக்கூடியது அல்ல. வழிமுறைகள் சரியாக இருந்தால் , கர்த்தர் தமது மக்களுக்கு  ஆசீர்வாதங்களை வழங்குதற்குரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.

சங்கீதம் 133 : 3 ” எர்மோன் மேலும் , சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது. அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். “

 என்னைப் பொறுத்த வரையில் கர்த்தருக்கு பயப்படுவதை விவரிக்கும் சிறந்த வார்த்தை கர்த்தர்மீதுள்ள பயபக்தியாகும். கர்த்தருடைய வெளிப்பாட்டிற்கு அவர்மீதுள்ள பயபக்தியே காரணம். அவர் தன்னை வெளிப்படுத்தும் போது , அதற்குரிய  பொருத்தமான காரணம் பயபக்தியே என்பதை நான் நம்புகிறேன். நம்மையே தாழ்த்தி  அவருக்கப் பணிந்து வாழ்வதன்  வழியாகவே இது செல்கிறது. கர்த்தரை நோக்கி நாம் பணிந்து செல்லும் மனப்பான்மை , நாம் நம் வாழ்க்கையில் அவருக்கு பயப்படுவதை காட்டுகிறது.

நான் உங்களுக்கு ,  கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது கர்த்தருக்குப் பணி செய்வதற்குரிய முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். கர்த்தருக்கு பயப்படும் பயம் , நம் ஒவ்வொருவருக்கும் என்ன செய்யும் என்பதை அறியும்போது மேற்கூறிய வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்தும்.

யோபு 28 : 28 ல் கர்த்தர் என்ன சொன்னார் என்பதை முதலில் பார்ப்போம். ”  இதோ ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் “

உண்மையான ஞானத்தை கர்த்தருக்கு பயப்படுவதிலிருந்து பிரிக்க முடியாது. பலர் ஞானத்தை புத்திசாலித்தனம் என்ற அறிவார்ந்த ஒன்றாக நினைக்கிறார்கள். ஆனால் ஞானம் என்பது புத்திசாலித்தனம் அல்ல. ஏனெனில் புத்திசாலித்தனம் தீமையுடன் இருக்கும். கர்த்தருக்கு பயப்படுதல் தீமையுடன் இருக்க முடியாது .

சங்கீதம் 25 : 12  கர்த்தருக்கு பயப்படுவது இன்னொரு ஆச்சரியமான நன்மையை நமக்குத் தருகிறது.

”  கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார். ” இந்த வசனம் கர்த்தர் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.  மேலும் கர்த்தர் தம்முடைய மாணவர்களை தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. அவர் தம்முடைய மாணவர்களை குணாதிசயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார். மேலும் அவருக்கு பயப்படாதவர்களுக்கு கற்றுக் கொடுக்க அவர் தம்மை ஒப்புக்கொடுக்கவில்லை.  நீங்கள் சிறந்த வேதாகம வகுப்பிற்குச் சென்று கற்கலாம் . ஆனால் கர்த்தர்மீது பயம் இல்லாவிட்டால் நீங்கள் கர்த்தருக்கு மாணவராக முடியாது. நீங்கள் சாதாரண மனித ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களாக இருக்க முடியும். ஆனால் கர்த்தருக்கு மாணவராக இருக்க முடியாது.

மேலே கூறிய இரண்டு வசனங்களுக்குப் பிறகு சங்கீதம் 25 : 14 ல் இன்னொரு அற்புதமான சிந்தனையைக்  காணலாம்.  ” கர்த்தருடைய ரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். “

இது அற்புதம் இல்லையா? நீங்கள் கர்த்தருக்கு பயந்து நடந்தால் அவர் தம்முடைய இரகசியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். உங்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவருடன் மட்டுமே உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். அதாவது நீங்கள் நம்பும் ஒருவருடன் அல்லவா?

ஜெபம்

பிதாவே உமது வார்த்தைகளுக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே உமக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. பிதாவே , நேர்மையான வழியைத் தழுவி, நெளிந்த வளைவான  வழியை தவிர்ப்பதற்கான கிருபையை பெறுகிறேன். உமக்காக வாழும் கிருபையை , இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பெறுகிறேன். ஆமென்.

Sol. ஃபியானா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-01-2023

வெளிப்படுத்தின விசேஷம் ;  1 : 3  ” இந்த தீர்க்கத் தரிசன வசனங்களை வாசிக்கிறவனும் , கேட்கிறவர்களும் , இதில் எழுதியுள்ளவர்களைக் கைக் கொள்ளுகிறவர்களும்  பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது. “

மேற்குறிய வசனத்திலிருந்து ஒருவரின் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும் ஐந்து விஷயங்களையும்,  வசனங்களை கைக்கொள்கிற மக்கள்  ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

1 . ஒருவருக்கு உறுதியான விசுவாசம் இருக்க வேண்டும்.

2 கொரிந்தியர் 5 : 6 ” நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.” இந்த வசனத்தின்படி நாம் பார்வையினால் நடக்காமல் விசுவாசத்தினால் நடக்கிறோம். இந்த வசனம் , கர்த்தரை விசுவாசிக்கும் மக்கள் தங்கள் எல்லா செயல்களையும் விசுவாசத்தினாலே செய்கிறார்கள். உலகப்படியான மக்கள் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து அதற்கு எதிர்வினை செய்கிறார்கள். விசுவாசம் இல்லாத இடத்தில் கிறிஸ்தவம் கேலிக்கூத்தாக மாறுகிறது. விசுவாசத்தின் பொருளை நாம் மிகைப்படுத்த முடியாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில்  கிறிஸ்தவத்தின் பயணம் ‘விசுவாசத்தின் நடை’  என்று அழைக்கப்படுகிறது.

எபேசியர்  2 : 8    “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ” என்று சொல்கிறது. எனவே நாம் எல்லாவற்றிற்கும் கர்த்தரையே நம்பி அச்சமின்றி வாழ முடியும். எந்த கிறிஸ்தவனும் அவர்களுடைய நல்லவை பற்றி தற்பெருமை காட்ட முடியாது.

2 . கர்த்தருடைய கிருபையினாலும் அறிவாலும் விசுவாசம் பெருகும்.

2 பேதுரு 3 : 14 – 15

” ஆகையால் பிரியமானவர்களே , இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.  மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். ”  பேதுரு விசுவாசிகளுக்கு இங்கே எழுதுகிறார். பேதுரு எந்த வகையான சமாதானத்தை விவரிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. பேதுரு இரட்சிப்பிலிருந்து வரும் சமாதானத்தை விவரிக்கவில்லை. மாறாக பரிசுத்தமாக்குதலில் வளரும் சமாதானத்தை விவரிக்கிறார்.

 3 . தூய்மையான மற்றும் பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் .

யோவான் 17 : 17 ” உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் : உம்முடைய வசனமே சத்தியம். “

நாம் எங்கே குறையாக இருக்கிறோம் அல்லது தவறு செய்கிறோம் என்பதை கர்த்தருடைய வசனம் காட்டுகிறது. அது நம்மை திருத்துகிறது. மற்றும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. கர்த்தருடைய வசனம் நம்முடைய வாழ்வு மற்றும் விதியின் பாதுகாவலராக இருக்கிறது.

4 . இது நாம் கர்த்தருக்கு பணி செய்ய வல்லமையை தருகிறது.

எபேசியர் 2 : 10 ” ஏனெனில் , நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு , தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” நல்ல செயல்களுக்கான உங்களின் ஆர்வமும் வைராக்கியமும் அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் செயல்களின் பலனாகும்.  ஏனென்றால் நம்மிலும் பெரியவர் நம்மில் செயல்படுகிறார்.

5 . பணி செய்ய நம்மை தயாரிக்கிறது.

கொலோசியர் 3 : 16   “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள். ” கர்த்தருடைய வசனம் நல்ல தேர்ந்த அறிவுடன் மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறனை தருகிறது. மேலும் அது நம்மை தயார்படுத்தி அவரை துதிக்கவும் ஆராதிக்கவும் நமக்கு விருப்பத்தை தருகிறது. நாம் அவற்றை உள்வாங்குவது நம்முடைய வாழ்வின் நலனை தீர்மானிக்கிறது.

ஜெபம்

பிதாவே, எங்களுக்கு வாழ்வளிக்கும் உமது வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தைகள் எங்களை உமது ஆவியுடன் இணைக்கிறது. உமது வார்த்தைகள் உம்முடைய பரிசுத்த சந்நிதியில் வந்து தங்குவதற்கு எங்களை தயார்படுத்துகிறது. ஆமென்.

Sol. பாபு செபாஸ்டின்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-01-2023

எரேமியா 15 : 16 ” உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் , என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. “

பழைய ஏற்பாட்டின் அழுகை தீர்க்கத்தரிசி என்று அழைக்கப்படும் எரேமியா , உடைந்து கொண்டிருக்கும் யூதேயா தேசத்தை எச்சரிக்க அதன் தெற்கு ராஜ்யத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அது கடினமான வாழ்க்கையாக இருந்தது. அவர் , நான் உமது பெயரால் அழைக்கப்பட்டேன், உமது வார்த்தையை கண்டதும் அவற்றில் நான் மகிழ்ந்தேன் என்கிறார்.  இது கிறிஸ்துமஸ் , புத்தாண்டு நேரம். மக்கள் குடும்பங்களாக  விருந்துகள் மற்றும் பஃபேக்களில் சந்திக்கும் காலத்தில் மேஜை நிறைய நல்ல உணவுகள் இருக்கும். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கர்த்தரின் வசனங்களைப் படிக்கும் போது தனது அனுபவம் மேற்கூறியபடி இருந்தது என்று எரேமியா கூறுகிறார். அது அவருக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.  வேறு விதமாக சொல்லப்போனால் , கர்த்தருடைய வசனம் அவரது ஆத்தும உணவு. அது அவரது சோதனைகளுக்கு மத்தியில் அவரை மாற்றியது.

யோவான் 1 : 1 ” ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது “

நாம் கர்த்தருடைய வசனங்களை வாசிக்கும்போது , நாம் கர்த்தரை வாசிக்கிறோம், கேட்கிறோம் என்பதே இதன் அர்த்தம்.

கராத்தருடைய வசனங்களின் பலன்களை பார்ப்போம். நாம் கஷ்டங்களையும் கடினமான நாட்களையும் எதிர்கொள்ளும்போது , உங்கள் கஷ்டங்களை சரிசெய்ய கவலைப்படாதீர்கள். கர்த்தருடைய வசனங்களை தோண்டி எடுங்கள். ஏனென்றால் அவருடைய வசனங்கள் ஆவியும் ஜீவனும் உள்ளது.

யோவான் 6 : 63 ” ஆவியே உயிர்ப்பிக்கிறது   மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது , நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. “

நாம் இருண்ட நாட்களில் நடக்கும்போது , கர்த்தரின் வார்த்தை நம் கால்களுக்கு விளக்காகவும் , நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.

சங்கீதம் 119 : 105 ” உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது”

கர்த்தர் சொல்கிறார் ,அவரது வசனம் நெருப்பு மற்றும் பாறையை உடைக்கும் சுத்தியல் அல்லவா? உங்களது வாழ்க்கையில் பாறையைப் போன்ற பிரச்சனை உள்ளதா? வசனத்தை தேடுங்கள். அதன்மீது அந்த வசனத்தை அறிவியுங்கள். அந்த பாறை உடைந்து எரிக்கப்படும்.

எரேமியா 23 : 29 ” என் வார்த்தை அக்கினியைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலவும் இருக்கிறதல்லவோ ? என்று கர்த்தர் சொல்லுகிறார். உண்மையில் இந்த வசனம்  போருக்கு பயன்படுத்தப்படும் ஒரு வாள். விசுவாசிகள் போரில் இருக்கிறார்கள். நம்முடைய வாள் கர்த்தரின் வசனம்.

எபேசியர் 6 : 17

” இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் , தேவ வசனமாகிய பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். “

 இதில் நமக்கு வெற்றி நிச்சயம். கர்த்தருடைய வார்த்தை வீணாகத் திரும்பாது. அது அனுப்பினதைச் செய்யும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசாயா 55 : 11 ” அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்கு திரும்பாமல் , அது நான் விரும்புகிறதைச் செய்து , நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். “

நமது உணர்வின் ஆரோக்கியம் நமது உடலின்  ஆரோக்கியத்தைப் பொறுத்தே இருக்கிறது. வேதாகமம்  கர்த்தரின் வசனத்தினால் உங்கள் எண்ணங்களை புதுப்பியுங்கள் என்று சொல்கிறது.

ரோமர் 12 : 2 ” நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். “

நாம் சிந்தனை மேலாண்மையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 5 படிகள் அல்லது 10  படிகள் அதற்கு மேலேயும் உண்டு. ஆனால் கர்த்தருடைய வசனம் நம் சதைக்கு ஆரோக்கியம் என்றும் எலும்புகளுக்கு சிறந்த வலிமை . இதுதான் சிறந்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 3 : 8  ” அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுபாகும். “

எலும்பு மஜ்ஜையில்தான் உயிருக்கு இன்றியமையாத இரத்த அணுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளர்கள் அதை கண்டுபிடிப்பதற்கு முன்பே கர்த்தர் இதைச் சொன்னார். எனவே நாம் கவலை, பதற்றம் ,மனச்சோர்வு , நோய்வாய்ப்பட்டால் மருந்து கர்த்தருடைய வசனத்திலுள்ளது.

நீதிமொழிகள் 4 : 20 – 22 ” என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி: என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய் , அவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக : அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக் கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். ” வெற்றியும் வளமையும் அடைய விரும்பாதவர் யார்? இந்தப் புத்தகம் நம் வாயிலிருந்து நீங்காது என்றும் இரவும் பகலும் அதைத் தியானித்து சொன்னபடி செய்யக் கடைபிடிப்போம் என்று கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 8 ” இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி , இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்.”

இதுவே வெற்றிக்கும் வல்லமைக்கும் திறவுகோலாகும். இந்த உலகத்திலுள்ள எந்த மேலாண்மை புத்தகத்தைவிடவும் சிறந்ததாகும்.

2 தீமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் , கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் , நீதியை படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

ஒவ்வொரு வசனமும் கர்த்தர் சுவாசித்தது என்று வேதாகமம் கூறுகிறது. ஜீவன் நிறைந்த கர்த்தரை சுவாசிப்போம்.  நமக்கு கிடைத்திருக்கும் மிக ரகசியப் பொக்கிஷமான கர்த்தரின் வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் தோண்டி எடுப்போம். அந்த மர்மத்தை அவிழ்த்து 2023 ல் கர்த்தருடன் ஒரு அழகான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்ல பரிசுத்த ஆவியானவர் உதவும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்போம். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-12-2022

2 கொரிந்தியர் 3 : 18  ” நாம் எல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு , ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத் தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். “

புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆண்டு முழுவதும் எங்களோடிருந்து , கர்த்தருடைய வசனங்களில் வளரவும், முன்னேறவும் எங்களது ஜெப வாழ்க்கையில்  உதவி செய்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.   நாங்கள் ஜெயிப்பதற்கும் , மாறுவதற்கும் ,ஜெபத்தில் முன்னேறுவதற்கும்  வசனத்திலும் , சேவையிலும் வளர்வதற்கும்  இன்னும் ஓர் ஆண்டினை எமக்கு அளித்த பரலோகத் தந்தையையும் அவருடைய ஒரே பேறான குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் போற்றி புகழுகிறோம். வருகிற இந்த ஆண்டில் நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வில் வளர வேண்டும். நாம் ஜெபிக்கும் போதும் பரிசுத்த ஆவியானவரின் கிருபையில் நடக்கும் போதும் நாம் கர்த்தரின் பிரசன்னத்திற்குள் நெருங்கி வருகிறோம்.  நாம் அவருடைய இந்த வல்லமை , அன்பு மற்றும் நீதியை அனுபவிக்கும் போது , அவருடைய சாயலில் மாறுகிறோம்.

எபிரேயர் 1 : 3 ” இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும் , அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து , சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்திலே தாங்குகிறவராய் , தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி , உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். “

எபேசியர் 4 : 11 – 13 ” மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும் வரைக்கும் , பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் , கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் ,அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும் தீர்க்கத்தரிசளாகவும் , சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். “

கர்த்தருடைய மேலான திட்டமே நாம் அவருடைய குமாரன் இயேசுவாக இருக்க வேண்டும் என்பதே. நாம் ஏற்கெனவே இயேசுவாகிய பாறையிலிருந்து உடைக்கப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் வடிவம் கொடுக்கும் செயல்முறை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இது ஒரு மெதுவான , சிலருக்கு பலநேரங்களில் வேதனை கொடுக்கக்கூடிய செயல் . நம் கர்த்தர் ஒரு கைவினைஞர். அவர் எந்த தவறும் செய்யாதவர். நமது பணி எப்போதும்  அவரது தெய்வீக வழிகாட்டுதலில் இருக்க வேண்டும்.

1 பேதுரு 5 : 6 ” ஆகையால் , ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு , அவருடைய பலத்த கைகளுக்குள் அடங்கியிருங்கள்.”

முயற்சிகளை மேற்கொள்ளும்போது ஒரு போதும் சோர்வடைய வேண்டாம். ஆரம்பம் மெதுவாக இருக்கலாம். பாதை பாறையாக இருக்கலாம். ஆனால் முடிவு மகிமையாக இருக்கும்.

பிலிப்பியர் 1 : 5 ” உங்களில் நற்கிரியைகளை தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புகிறேன். “

அவருடைய கண் ஒருபோதும் தூங்காது , அவருடைய காது ஒருபோதும் கேட்பதை நிறுத்தாது , அவருடைய கரங்கள் ஒருபோதும் சோர்வடையாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு அத்தகையது. அத்தகைய அன்பிற்கு முடிவே இல்லை.

ஜெபம்

அன்பின் பரலோகத் தந்தையே , நீர் என்னை தெரிந்துகொண்டதற்காகவும்  அன்பு செய்ததற்காகவும் , கற்றுக் கொடுத்ததற்காகவும்,  என்னை உமது பிள்ளையாக உருவாக்கியதற்காகவும் , படிப்படியாக என்னை கட்டுவித்ததற்காகவும் நன்றி செலுத்துகிறேன். தயவு செய்து எனக்கு உதவும் ,என்னை உருக்கும் ,என்னை களிமண்ணாக மாற்றும் . உமக்குப் பிரியமான வழியில் நான் செல்ல என்னை மாற்றும். என்னுடைய வாழ்வினால் நீர் மகிமைப்படுவீராக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இதைக் கேட்கிறேன். ஆமென்.

Sol. மல்கீத்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-01-2023

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. “
எபேசியர் 6 : 12

நியாதிபதிகள் 7 – 15 முதல் 8 : 21வரை கிதியோனையும் மீதியானியர்களுடன் போரிட்ட அவருடைய ஜனங்களையும் பற்றி சொல்லப்படுகிறது.  கர்த்தருடைய வழிகாட்டுதலின்படி கிதியோனின் தலைமையில் எக்காளங்களை ஊதி,  பானைகளை உடைத்த பிறகு ,  கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சொன்னார்கள்.

இவைகளுக்கு ஆவிக்குரிய முக்கியத்துவம் உண்டு. நாம்  உலகத்தின் இருளோடு போரோடும்போது அல்லது யுத்தம் செய்யும்போதெல்லாம்  , விசுவாசிகள் கர்த்தரை ஆராதிப்பதையோ  அல்லது துதிப்பதையோ  குறிக்கும் எக்காளத்தை பயன்படுத்தலாம். பட்டயம் என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய கர்த்தருடைய வசனங்களைக் குறிக்கிறது. விளக்கு என்பது நமது உடலில் தங்கி வாசம் செய்யும் கர்த்தரின் வல்லமையைக் குறிக்கிறது.

விசுவாசிகள் போரிடும்போது அவர்கள் தங்கள் சொந்த பலத்தையோ, அல்லது உலகத்திலுள்ள சக்திகளையோ நம்பாமல் கர்த்தருடைய பலத்தை மட்டுமே நம்ப வேண்டும். யோசுவாவும் அவருடைய ஜனங்களும் கர்த்தரை துதித்ததால் எரிக்கோ கோட்டையை தகர்த்தார்கள். யோசுவா 5 :14  மற்றும் 6 :15 ல் இதைக் காணலாம். கர்த்தரை துதிப்பது உள்ளார்ந்த மற்றும் வெளிசார்ந்த  சுவர்களை உடைப்பதில் மிகப்பெரிய வலிமையை கொண்டுள்ளது.

கர்த்தரை துதிப்பது, நமது மனக்காயங்களை ஆற்ற உதவுகிறது. மேலும் சக மனிதர்களுடன்  சமரசம் செய்வது  சாத்தியமாகிறது. உறவுகளை சீர்படுத்துவதற்குரிய படிகளை முன்னெடுப்பதற்கு ஆவிக்குரிய பலத்தை தருகிறது. சங்கீதம் 149 : 8 நம் வாயில் துதி இருப்பதை கோடிட்டு காட்டுகிறது.

விசுவாசிகள் கர்த்தருடைய வசனங்களில் உறுதியாக இருக்க வேண்டும். இது சோதனைகளைக் களைந்து ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவுகிறது. ஒவ்வொருமுறையும்  சோதனைகள் நம்மை  பற்றும்போது, கர்த்தருடைய பிள்ளைகள் எனவும்  பாவத்திற்கு எதிரான போராளிகள் எனவும்  நிரூபிக்க வேண்டும். லூக்கா 4 : 4 ல் கிறிஸ்து ,  ” மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ”  என்று தெளிவாகக் கூறுகிறார். கர்த்தருடைய வசனங்களை பயன்படுத்தியதன் மூலம் அவருடைய சோதனைகளை களைந்தார்.

சங்கீதம் 149 : 8″ அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும் ” என்று சொல்கிறது.

பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நம்முள் இருப்பது, நம்மை பலமுள்ளவர்களாகவும் வல்லமையுள்ளவர்களாகவும் மாற்றும். நாம் அனைவரும் உடையக்கூடிய களிமண்ணைப்போல பலவீனமாக உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

1 கொரிந்தியர் 3 : 16  ” நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும் , தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? “

இந்த வசனத்தில் சொல்லப்பட்டபடி நாம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருந்தால் , அவர் மூலமாக  கர்த்தருடைய பிரசன்னம் நமக்குள் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் பாவத்திற்கு எதிராக நம்மை எச்சரித்து , வெற்றிகரமான வாழ்க்கை நடத்த உதவுகிறார்.

கிதியோனுடைய ஜனங்கள் பானைகளை உடைக்கும்மோது தங்கள் கைகளில் விளக்கை எடுத்துச் சென்றார்கள்.

 1 பேதுரு 2 : 24  ” நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, ” என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கிதியோனுடைய ஜனங்கள் வாயில் கூச்சலும் , அவர்களை மீதியானியர்களுக்கு எதிராக வெற்றி பெற உதவிய  எக்காளங்களை வலது கைகளிலும் ,  விளக்குகளை இடது கைகளிலும்  ஏந்தியபடி சென்றதை கற்பனை செய்யலாம்.  இருளின் ஆட்சியாளர்கள், பொல்லாத ஆவிகள் மற்றும் உலகின் சக்திகளுக்கு எதிரான நம்முடைய போரில் துதி , ஆராதனை , கர்த்தருடைய வசனங்கள் , பரிசுத்த ஆவியானவர் மூலம் பெறும் வல்லமை ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

ஜெபம்

அன்புள்ள கர்த்தாவே, உமது வசனங்களின் மூலம் நீர் எங்களுக்குத் தந்த ஆயுதங்களை பயன்படுத்தி , உமக்கு மகிழ்ச்சியளிக்கும் தகுதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த எங்களுக்கு உதவும். ஆமென்.

Sol.  ஏஞ்சலின்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-12-2022

யோபு 1 : 1 ” ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து , பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்”


மேலும் இந்த அத்தியாயத்தை படிக்கும் போது யோபு நிறைய ஆசீர்வாதங்கள் பெற்றவனாகவும் , தனக்காகவும் தன் குழந்தைகளுக்காகவும் எரிபலிகளை செலுத்தி வந்ததாகவும் அறிகிறோம். தன் பிள்ளைகள் பாவம் செய்து கர்த்தரை விட்டுப் பிரிந்திருந்தால் , அவருடைய எரிபலிகள் அவர்களின் பாவங்களைக் கழுவிவிடும் என்று உறுதியாக நம்பினார்.

மேலும் அதே அத்தியாயத்தில், கர்த்தர் யோபுவின் வீட்டை வேலியடைத்து பாதுகாத்தார் என்றும் அவருடைய வேலைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவையாக இருந்தது என்றும் வாசிக்கிறோம்.
ஒருநாள் கர்த்தர் சாத்தானிடம் என் தாசனாகிய யோபுவைக் கண்டாயோ, அவனைப் போல நேர்மையாளனும் தெய்வபயமுள்ளவனும் ஒருவனும் இல்லை என்றார்.

முதலில் நாம் , கர்த்தருக்கு பயப்படும் போது , தீமையிலிருந்து விலகி , நம் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் கர்த்தர் நம்மைக் குறித்து பெருமைபாராட்டுவார்.
உதாரணமாக , நம்முடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும் , நமக்கு கீழ்படிபவர்களாகவும் இருக்கும்போது, அவர்கள் நமக்கு கீழ்படிவது மட்டுமல்லாமல் நம்மை அன்புசெய்வதாகவும் நாம் பெருமையாக ஊணர்வோம். இதே போன்றுதான் கர்த்தரும் நம்மைக் குறித்து பெருமை கொள்வார்.
கர்த்தர், நாம் கைகளினால் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் அவருடைய வேலியைக் கட்டுவார்.
கர்த்தர் யோபுவைப்பற்றி புகழும் போது சாத்தான் , கர்த்தருடைய மதிப்பீடு அதிகப்படியானது என்று நம்பி எரிச்சலடைந்தான். அவன் கர்த்தரிடம், யோபுவின் உடைமைகளின் பாதுகாப்பை விலக்கியவுடன் , யோபு உமக்கு நேர்மையாளனாக இருக்கிறாரா என்று காணும் என்று சொன்னான்.
உண்மையில் கர்த்தர் சாத்தானுக்கு ,யோபுவின் பிள்ளைகள் மீதும் , அவனது உணவுமீதும் , அவனது உயிரைத் தவிர அவனது உடல், அனைத்து உடைமைகள் மீதும் அதிகாரம் கொடுத்தார் என்று இந்த அத்தியாயத்தில் வாசிக்கிறோம்.
ஆனாலும் யோபு தன் சொந்த வாயினால் கர்த்தரை நிந்திக்கவில்லை. உறுதியான நம்பிக்கையையே கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்களிடம் யோபு , நாம் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். பின் ஏன் துக்கங்களை மட்டும் பெறக்கூடாது என்று தைரியமாகச் சொன்னார்.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். யோபு நிறைய துன்பப்பட்ட போதிலும் கர்த்தருக்கு எதிராக மோசமாக எதையும் பேசவில்லை.
ஆனால் ,நம்முடைய சொந்த பலவீனங்களாலும் அல்லது தவறான செயல்களாலும் நம் வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் நாம் கர்த்தரையே பழிபோடுகிறோம். அவருடைய நீதியின் மீதும், அவருடைய செயல்கள்மீதும் நம்முடைய விரல்களை நீட்டுகிறோம். உண்மையில் நம் வாழ்க்கையில் சாத்தானுக்கு ஒரு எழுச்சியை உருவாக்க நாம்தான் ஒரு சந்தர்ப்பத்தை தருகிறோம்.

யோபுவின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது , கர்த்தர் பின்னால் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை அவனுக்கு கொடுத்ததை காண்கிறோம். எனவே இன்று நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும் ஒருபோதும் கர்த்தர்மீது பழிபோட முயற்சி செய்யக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும்.

நாம் இப்போது நம்முடைய பாதகமான சூழ்நிலைகளில் நம்மை நாமே பரிசோதித்து நமது வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும். மேலும் நம்மீது கர்த்தர் காட்டும் கிருபையை இரக்கத்தை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. கர்த்தர் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரது நம்பகத் தன்மையில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். தவறான வாக்குறுதிகளை அளிப்பதற்கு கர்த்தர் மனிதர் அல்ல.

அன்பின் பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக எல்லா மரியாதையுடனும், பயபக்தியுடனும், சிரம் தாழ்த்தி உம்மை வணங்குகிறோம் .
கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் என்ன எதிர்கொண்டாலும் உம்மை விசுவசிப்போம். ஏனென்றால் நீர் நம்பிக்கைக்கு உரியவர் , உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உமது பிள்ளைகளுக்கு எந்த தீமையும் வர விடமாட்டீர் என்று நம்புகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா