தானியேல் 03-02-2022 – தேவ செய்தி

பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

(லூக் 18:11).

தங்கள் நீதிமான்கள் என்று தங்களை நம்பி மற்றவர்களை இகழ்ந்த சிலருக்கு இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

சுயநீதி நம் சொந்த தவறுகளிலிருந்து நம் கண்களை குருடாக்குகிறது மற்றும் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் தவறுகளை செய்யும்போதோ  அல்லது நம்மைப் போன்ற ஆவிக்குறிய கனிகளை தராத மற்றவர்களை இழிவாகப் பார்க்க வைக்கிறது.

ஒரு முறை ஒரு ஜெபக்கூட்டத்தில் என்னுடைய தோழி செய்தியின் போது தூங்கிவிட்டாள். நான் வருத்தப்பட்டேன், இதற்காக அவளை வெறுத்தேன்.கஆனால் சில நிமிடங்களில் நானும் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். ஆனால் ஆவியில் நான் விழித்திருந்தேன், அந்த வேளையில் கர்த்தர் என்னிடம், “ குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்.” தோழியின் பலவீனத்தில்  அவள் மேல் கருணை காட்டாததால் நான் மனம் வருந்தினேன்.

லூக் 13:2,3 – இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

லூக் 6:41 – நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

நாம் சுய நீதியில் இருக்கும்போது  கர்த்தருக்கு நன்றி சொல்வதில் குறைவு படுகிறோம்.

லூக் 7:36-47 – பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று இயேசுவை அழைத்தான். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் அங்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தாள். நியாயபிரமாணங்களை பின்பற்றும் பரிசேயன் அந்த ஸ்திரீயை இழிவாகப் பார்த்தான். அதே வேளையில் தான் ஒரு பாவி என்று உணர்ந்த அவளோ இயேசுவினுடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். இயேசு 47 வசனத்தில் – இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே, எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்பட்டதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”

செயல்களில் காட்டப்படும் மனிதனின் நீதி மற்ற மனிதர்களுக்கு முன்பாக மேன்மை பாராட்டை பெறும் ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுமில்லை, ரோமர் 4:2.  நாம் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்ல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது – ஏசா 64-6. இயேசுவே நம் பாவங்களை மன்னித்து கர்த்தருக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்குகிறார், நம்முடைய செயல்கள் அல்ல.

ரோமி 3:22 – அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

கலா 2:20 -; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

ஆமேன்.

Sol. Sheeba Benjamin AOJ

தானீயேல் – II 02-02-2022

லூக் 19:9 இல் பரிசேயன் மற்றும் ஆயக்காரனை பற்றி இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது. பரிசேயன் சுய நீதிக்காரன் மேலும் அவன் ஆயக்காரனை துச்சமாக எண்ணுகிறான். ஆனால் ஆயக்காரனோ தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து கர்த்தருடைய கிருபைக்காக மனறாடுகிறான், அதனால் அவன் உயர்த்தவும் படுகிறான்.

கர்த்தருடைய வார்த்தை இருபக்கமும் கருக்குள்ள பட்டயம். சுய நீதி மற்றும் பெருமை அல்ல மாறாக கர்த்தர் தாழ்ச்சியையே விரும்புகிறார். விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய கிருபையை இழக்காதபடிக்கு மற்றவரை இகழ்ந்து பேசக்கூடாது. ரோம 12:3 – “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” – கர்த்தரைப் பற்றிய பெரும்பாலான மனிதர்களின் புரிதல் உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. வேதம் இதற்கு நிறைய உதாரணங்களை தருகிறது. அவைகளில் சிலவற்றை நாம் தியானிக்கலாம்.

ஆதி 29 – யாக்கோபு எவ்வாறு ராகேலுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்றும் தன்னுடைய அன்புக்கு அவளை பாத்திரமாக கருதினான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 31 வது வசனம் சொல்லுகிறது, “லேயால் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்பதை கர்த்தர் கண்டார்.” லேயால் தன் கணவன் மீதான அன்பிலும், கர்த்தர் மீதான விசுவாசத்திலும் உறுதியாக இருந்தாள். அதனால் கர்த்தர் லேயாளுக்கு 6 பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார் மேலும் ராகேலையோ நீண்ட காலமாக மலடியாக வைத்திருந்தார். லேயால் தன் கணவனால் அற்பமாக எண்ணப்பட்டால் ஆனால் கர்த்தருடைய கண்களில் அவளுக்கு கிருபை கிடைத்தது.

1சாமுவேல் 16:11 எவ்வாறு தாவீது, ஈசாயின் மறக்கப்பட்ட ஒரு மகனாக இருந்தான்.  இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் பண்ணும்போது சாமுவேல் ஈசாயை கேட்கிறார், “உன் பிள்ளைகள் இவ்வளவுதானா?..இன்னும்  எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றான்.” கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதை சாமுவேல் அபிஷேகம் செய்கிறார்.

நியாயாதிபதிகள் 6:15 – கிதியோன் தன்னுடைய தகப்பன் வீட்டில் “நான் எல்லாரிலும் சிறியவன் “ என்று கருதினான் ஆனால் கர்த்தரோ அவனை பராக்கிரமசாலியாக கருதுகிறார். நியா 6:12.

யோவான் 4 –சமாரியப் பெண் யூதர்களாலும், கிராமத்தில் இருக்கும் மற்றவர்களாலும் துச்சமாக எண்ணப்பட்டாள் அதனால் தான் யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க யாரும் வராத நேரத்தில் வந்தாள். அவள் இயேசுவை சந்தித்த பின் நற்செய்தியை அறிவிப்பவளாக மாற்றப்படுகிறாள், அதுமட்டுமல்ல அவள் அநேகரை கர்த்தரிடத்தில் கொண்டுவருகிறாள்.

ஒரு முறை நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  அந்த நாட்களி என்னிடம்  Ph.D பட்டமோ தேவையான அனுபவமோ இல்லை. நேர்காணலுக்கு வந்திருந்த மற்றவர்களுடைய அதிகமான படிப்பையும் அனுபவத்தையும் பார்த்தபோது எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாமல் போனது. ஆனால் நான் ஜெபித்தேன், கர்த்தரை சார்ந்திருந்தேன். இன்றும் கூட என்னால் சாட்சியாக சொல்ல முடியும், தகுதியின் அடிப்படையில் கர்த்தரே என்னை தேர்ந்தெடுத்தார்.

ஒருவர் தன்னை எப்படி பார்த்தாலும், அவருடைய குடும்பத்தினரோ அல்லது சமுதாயமோ எப்படி பார்த்தாலும், கர்த்தர் நம்மை எவ்வாறு பார்கிறார் என்பதை பைபிள் நமக்கு கற்பிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மற்றவர்களை கர்த்தர் பார்கிறபடி பார்க்க அவருடைய கிருபையை நாட வேண்டும். அதே சமயம் நாம் இகழ்ந்து அற்பமாக நடத்தப்படும்போது மனிதனுடையதை விட சிறந்த தயவை கர்த்தரிடமிருந்து பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்க முடியும். வாழ்வில் நம்முடைய எதிர்பார்புகளுக்கு மேலாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்த சூழ்நிலைகளை நாம் சந்தித்திருக்கலாம். அவருடைய கிருபை என்றும் உள்ளது, அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

அன்பு தேவனே,

நாங்கள் வெறுக்கப்படும்போது உம்மைச் சார்ந்திருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களை இகழ்வோருக்கு முன்பாக எங்களை உயர்த்த உமது கண்கள் எங்கள் மீது இருக்கிறது என்று நம்புவதற்கு எங்களுக்கு உதவும். மற்றவர்களில் சிறந்ததையே காணவும், உம்முடைய சிருஷ்டியில் ஒருவரை கூட இகழாமல் இருக்கவும் எங்களுக்கு கிருபைதாரும். ஆமேன்.

Sol G.S. Angelin AOJ Trichy

தானியேல் – II 01-02-2022 – தேவ செய்தி

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்

(லூக் 18:9)

நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். இதனால் எனக்கு வேதத்தைப் பற்றி நன்கு தெரியும் என்றும் பெரும்பாலானவர்களை விட நான் சிறந்தவன் என்றும் நினைத்தேன். ஆனால் வயது ஆக, ஆக, நான் நினைத்தது எதுவுமே எனக்கு நல்லது செய்யவில்லை என்பதையும், என் வாழ்நாள் முழுவதும் வேதத்தைப் படித்திருந்தாலும் வேதத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்பதையும் அறிந்தேன்.

நான் இந்த வசனத்தை படித்துக்கொண்டிருக்கையில்,  நம்முடைய சுயநீதியின்  மீது நாம் அளவுகடந்த நம்பிக்கை வைக்கும் போது நடக்கும் 3 காரியங்களை கர்த்தர்  எனக்கு காட்டினார்.

  1. இது கர்த்தர் நமக்கு கொடுக்கும் வெளிப்பாடு மற்றும் பணியிலிருந்து நம்மை திசை திருப்புகிறது.

மாற்கு 10:20, 21,22,23 ஒரு பணக்கார இளைஞன் இயேசுவை சந்திப்பதைப் பற்றி விளக்குகிறது. தன்னுடைய அறிவும், கற்பனைகளுக்கு கீழ்படிவதும் அவனை நல்லவனாக மாற்றும் என்று அவன் நினைத்திருந்தான் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரை வைக்க வேண்டும் என்ற வெளிப்பாட்டை அவன் இழந்துவிட்டான்.

  • இது கர்த்தருடனான நமது ஒற்றுமையை துண்டிக்கிறது.

நியா 16:20; – கர்த்தரோடு இசைந்திருக்காமல் தன் அபிஷேகம் மற்றும் அது கொண்டுவந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்த சிம்சோனைப் பற்றி சொல்லுகிறது. அவன் தனது பலத்தின் ரகசியத்தை தெலீலாளுக்கு வெளிப்படுத்தியவுடன் கர்த்தர் அவனை விட்டு விலகினார்.

  • இது கர்த்தருடைய அழைப்பையும், அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படியாதபடி செய்கிறது:

உபா 10:1- ஆரோனின் புத்திரர்களாகிய நாதாவும், அபியூவும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள். 1சாமு 13 சவுல் ராஜா, சாமுவேல் ஆசாரியன் மட்டுமே செலுத்த வேண்டிய பலியை, அவன் வர தாமதித்ததால் சவுல் ராஜாவே செலுத்தினார் என்றும் பார்கிறோம். இரண்டு நிகழ்விலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததின் காரணமாக அவர்கள் தங்களுடைய அபிஷேகத்தை இழந்தார்கள், அதுவே அவர்களுடைய அழிவுக்கு காரணமாயும் இருந்தது.

இந்த வேத வசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன வென்றால், நாம் கர்த்தரோடு இருப்பது சுத்த கிருபைதான் என்றும், அவருக்கு முன்பாக நம்மை தொடர்ச்சியாகவும், விடாமல் தாழ்த்த வேண்டும் என்பதுதான்.

2கொரி 12:9 – “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”

2கொரி 4:7-9 மற்றும் மத் 5:5 பொக்கீஷத்தை மண்பாண்டங்களில் (பலவீனமானது) கொண்டிருக்கிறோம் எனவே சாந்தமாக (தாழ்த்தப்பட்ட மற்றும் பணிந்து) இருப்பதுதான் நமக்கு பாக்கியம்.

எனவே இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி கர்த்த்ரை மட்டுமே மகிமைபடுத்த கூடிய ஒரு வாழ்வை அனுதினமும் விடாமலும் வாழ்வோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

Sol.Paul Hudson

தானியேல் – II 31-01-2022

உன்சகோதரனாகியஇவனோமரித்தான், திரும்பவும்உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும்காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம்சந்தோஷப்பட்டுமகிழ்ச்சியாயிருக்கவேண்டுமேஎன்றுசொன்னான்என்றார்.

(லூக் 15:32)

இந்த வசனம் என்னுடைய கடந்த வாழ்வில் உண்மையானது. இந்த வசனத்தை நான் படித்த நேரத்தில் என் கடந்த கால வாழ்க்கை நினைவுக்கு வந்தது. 

என் வாழ்க்கையின் கடந்த 2 வருடங்கள் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நான் பாரமான இருதயத்துடன் எழுந்தேன். கடைசியாக நான் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது என்று கூட எனக்கு நினைவு இல்லை. மனதளவில் நான் மிகவும் சோர்ந்துபோனேன். என்னை அன்புசெய்த அனைவரிடமும் என்னை விலக்கி கொண்டேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன் மற்றும் உள்ளுக்குள் உடைந்துபோனேன். என்னை அன்பு செய்தவர்கள் முன்பு நான் மகிழ்ச்சியாய் இருப்பதாக நடித்த பல நாட்களும் உண்டு. என்னுடைய துக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  நான் ஆதரவற்றும், பலனற்றும் தரையில் விழுந்து அழுது புலம்பினேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல. வேதம் சொல்லுவது போல நான் மரித்துப்போய் இருந்தேன், ஆம் உள்ளுக்குள் நான் மரித்துப்போய் இருந்தேன்.

ஆனாலும் 99 ஆடுகளை விட்டு காணாமல் போன  ஒரு ஆட்டை தேடிப்போன அவருடை அன்பு என்னை மிகவும் ஈர்த்தது. (மத் 18:12). ஒரு மேய்ப்பன் ஒரு காணாமற்போன ஆட்டைக் குறித்து மலைகளில் தேடிச் செல்லும் அளவுக்கு அக்கறை காட்டுவது போல கர்த்தர் தான் படைத்த ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் அக்கறைகொள்கிறார்.

நான் திரும்பி பிதாவிடம் செல்ல அவருடைய கரங்கள் விரிந்து இருக்கின்றன. (லூக் 15:20). இந்த உவமையில் தகப்பன் தன்னுடைய மகன் மனம் வருந்தி அவரிடம் திரும்பி வரும்போது அவர் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அதே போல நாமும் நம்முடைய பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு அவரிடம் திரும்பி வரும்போது அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

ஊதாரிமகன் உவமையின் முக்கிய செய்தி என்ன வென்றால் நம்முடைய பரலோகத் தகப்பனிடமிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் அல்லது அவர் நமக்கு வழங்கிய திறமைகளை  நாம் எவ்வளவுதான் வீணடித்தோம் என்பது முக்கியமல்ல நாம் அவரிடம் திரும்பும்போது அவர் எப்போதும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறார். அவரது நிபந்தனையற்ற அன்பு நாம் வீடுதிரும்புவதற்காக காத்திருக்கிறது, மேலும் அவருடைய கரங்கள் நம்மை அரவணைக்க திறந்திருக்கிறது. நாம் மனிதர்களிடம் பாவங்களை அறிக்கையிடுவதைவிட கர்த்தரிடம் அறிக்கையிடுவது மிகவும் சுலபம். கர்த்தர் இரக்கமும், பொறுமையும், தயவும் உடையவர். அங்கி  மரியாதைக்கும், மோதிரம் அதிகாரத்தையும், காலணிகள் விடுதலையையும், ஊதாரி மைந்தனுக்காக வைக்கப்பட்டிருந்த விருந்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

துன்பத்திற்குள் என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்று கர்த்தர் எனக்கு பதில் தந்தார். “மக்களுடைய காயங்களில் எண்ணெய் மற்றும் திராட்சை ரசத்தை ஊற்றவும், நொருங்குண்ட இதயங்களை கட்டவும் அவர் என்னை அழைத்தார். (லூக் 10:34, சங் 147:3) எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றி நல்ல சமாரியன் செய்ததைப் போல காயப்பட்டவர்களை இயேசு தனது, இரத்ததாலும், காயங்களாலும் குணப்படுத்துகிறார். இயேசு உடைந்த இருதயங்களை கட்டுகிறார், காயமடைந்தவர்களை குணமாக்குகிறார், துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்; இது எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றுவதன் மூலம் செய்யப்படுகிறது.

எண்ணெய் கர்த்தரின் ஆவியின் கிருபையைக் குறிக்கிறது, எண்ணெயின் நல்ல மணம், அதன் உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியூட்டுஃப்ம் குணங்கள், அதன் செயல் திறன் மற்றும் குளிர்ச்சி மேலும் குணப்படுத்தும் தன்மை ஆகியவற்றிற்காக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. திராட்சரசம் நற்செய்தியின் கொள்கைகளாகிய – கிறிஸ்துவினுடைய நீதியால் நமக்கு கிடைக்கும் இலவச நீதி, அவருடைய இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பு போன்றவைகளை குறிக்கிறது.

கர்த்தர் என்னை அதிகமான வலியின் வழியே என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்றால், இருதயம் நொருங்குண்டவர்களோடு பழகவும் அவர்களை புர்ந்துகொள்ளவும்தான்.

என்னை கர்த்தர் அக்னியிலிருந்து எவ்வாறு காப்பாற்றினார் என்பதை சாட்சியாக சொல்லுவேன்.

நம்பிக்கையோடு நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை காப்பாற்றிய தேவன் உங்களையும் காப்பார்.

கர்த்தர் என்னோடு பேசியதை நினைத்து நான் அளவில்லா சந்தோஷமடைகிறேன்.

“இப்பொழுது நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய நேரம்.” ஏனென்றால் என்னுடைய அழுகையை சிரிப்பாக மாற்றியிருக்கிறார். என்னுடைய துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது ஏனென்றால் நான் கண்டுபிடிக்கப்பட்டேன்.

2022 இல் அடி எடுத்து வைப்பதற்கு முன்  கர்த்தர் நிறைவேற்றிய இந்த வாக்குறுதிகளைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

Sol. Alicia Mathew

தானியேல் – II 30-01-2022

கிறிஸ்துவின் சிந்தை

எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.

(லூக் 18:32)

மேற்கண்ட வசனத்தை தியானிக்கும் போது இந்தியாவின் ஒரிசாவில் தொழு நோயாளிகள் மத்தியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகளும் அவரால் சேவை செய்யப்பட்டவர்கள் மூலம் வேனில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட ஒரு காட்சி என் நினைவுக்கு வந்தது. அவரது மனைவி கிளாடிஸ் மிகுந்த வேதனையில் இருந்தாலும் கொலையாளிகளை மன்னித்து அவர்கள் மத்தியில் எந்த புகாரும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பவுல் பிலிப்பியர் 3:7 இல் சொன்னது போல, “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.”

இதுதான் கிறிஸ்துவின் சிந்தை.

லூக் 18:32 இல் இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி சொன்னது இங்கு நிறைவேறி இருக்கிறது. இது மத் 20:18-19 ல் உள்ளது, அவர் ஏற்கனவே சீடர்களுக்கு அவர் அனுபவிக்கப்போகும் துன்பங்களிப்பற்றி சொல்லியிருந்தார். ஆனால் இந்த வசனத்தில் உள்ளதைப்போல ஒருபோதும் தெளிவாக  சொல்லவில்லை. அவர் தான் எப்படி மரிக்கபோகிறோம் என்பதைப் பற்றிகூட சொல்லியிருந்தார். எவ்வாறு அவருடைய மக்களே அவரை புறஜாதியினரிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவர்கள் அவரை கொல்ல எல்லா தீய வழிகளையும் செய்வார்கள் என்றும் ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார், எதிரியை தோர்க்கடிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசு நம்முடன் இருந்தால் நாம் எந்த துன்பங்களை அனுபவித்தாலும் இறுதி வெற்றி நமக்கே என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. அவர் நமக்காக பலியானது போல நாமும் உயிருள்ள ஜீவபலியாக கிறிஸ்துவுக்காக மாற வேண்டும். (ரோம 12:1).  மத் 20:22 இல் அவர் சொன்னது போல, நம்முடைய அர்பணிப்பு, ஒப்புகொடுத்தல் மற்றும் பக்தி முழுமையானதாக இருக்க வேண்டும்,   அவருக்காக துன்பகலத்தை நாமாக முன்வந்து குடிக்க தயாராக இருக்க வேண்டும்.  அவருக்காக துன்பப்படுவதற்கு நமக்கு கர்த்தருடைய சிந்தை இருக்க வேண்டும், பிலி 2:5.

என் கணவரின் இதயக் கோளாறுகளாலும் பக்கவாதத்தாலும் இருபது வருடங்கள்    நான் துன்பத்தை சந்தித்தேன். ஆனால் எபே 3:16 வசனத்தால் நான் பலப்படுத்தப்பட்டதால் நான் சோர்வடையவும் இல்லை, குறை கூறவும் இல்லை. கீழ்காணும் பல்வேறு வசனங்களால் நான் என்னை திடப்படுத்திக்கொண்டேன். 

எபி 13:5 –  நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை

ஏசா41:10 – நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;

ஏசா 43:2 – நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்….

இப்பொழுதும் இது எனக்கு ஒரு மிகப் பெரிய சாட்சி. சங் 119:71 – நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

ரோமி 5:3-4 பிரச்சனைகள் மற்றும் சோதனைகளை சந்திக்கும் போது நாம் மகிழ்ச்சியடையலாம் ஏனென்றால் அவை நமக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறது, பொருமை நல்ல குணத்தையும், நல்ல குணம் இரட்சிப்பின் நம்பிக்கையும் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றாது.

ஜெபம்: உம்முடைய மகிமைக்காக துன்பத்தை தாங்கும் வரத்தை எங்களுக்கு தாரும் பிதாவே. ஆமேன்.,

Sol Gigi Jacob

தானியேல் – II 29-01-2022 – தேவ செய்தி

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். –

லூக் 14:33

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்ஞானம் பெறும்வரை எருசலேமை வீட்டு போகவேண்டாம் என்று தன்னுடைய சீடர்களுக்கு இயேசு கட்டளை கொடுத்தார். (அப்போ 1:4,5).

நாம் உலகபிரகாரமாக வாழாமல் ஆவியின் வழிநடத்துதலால் வாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். (2கொரி 10:3,4, ரோம 8).

பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுதல் என்றால் என்ன?

இயற்கைக்கும், எல்லா விதிகளுக்கும், அதிகாரத்திற்கும்   அப்பாற்பட்டு,  சுகமாதல், அமைதி, விடுதலை, அற்புதங்கள், முற்றிலும் புதிய வாழ்க்கையை பெறுதல் மேலும் நாம் அதற்கு என்ன தலைப்பு கொடுத்தாலும் அதற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்கையை வாழ்வது.

இது அற்புதங்களின் வாழ்க்கை – நாள்தோறும் நடைமுறையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மூட்டுவலி, ஆஸ்துமா, ஒவ்வாமை, காய்ச்சல், வலிப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து மக்களை குணமாக்குவது, பலரை உலக சிக்கலில் இருந்து அவர் நாமத்தால் விடுவிக்கப்பது.

வேலைதளத்தில் நான் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டேன் என்பதற்கான ஒரு உதாரணத்தை உங்களுக்கு முன் வைக்கிறேன். ஒரு முறை  என்னை பிரசவத்திற்காக அழைத்தார்கள்.  நான் அன்று ஒபிடி யில் இருந்தேன் மேலும் எனக்கு அழைப்புவிடுத்த மருத்துவமனை 3 கிமீ தூரத்திலிருந்தது. நான் அவசர அவசரமாக எனது மருத்துவமனையிலிருந்து கிளம்பிகொண்டிருக்கையில் என்னை முன்பு அழைத்த அதே மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. குழந்தை பிறந்துவிட்டதாகவும், பிறந்தவுடன் குழந்தை அழவில்லை என்றும் சொல்லினர். பத்து நிமிடத்தில் நான் குழந்தை இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தையின்  மூச்சு விடவில்லை மேலும் உடல்  இரத்தம் இன்றி வெள்ளையாமாறியிருந்தது. ஒரு மருத்துவராக நான் அந்த இடத்தில்  Resuscitation அதாவது குழந்தையை உயிர்பிக்க முதலுதவியை தர வேண்டும். இதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் பை மற்றும் வெண்டிலேட்டர் மூலம் அதன் நிலை மேம்பட்டது ஆனாலும் குழந்தை தன்னிச்சையாக சுவாசிக்கவில்லை. ஒரு மணிநேரபோரட்டத்திற்கு பின்னும் குழந்தை குணமடையவில்லை மேலும் இதய துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. குழந்தையின் கண்களில் எந்த அசைவும் இல்லை. குழந்தையின் தந்தையை அழைத்து குழந்தை மூச்சு இழுப்பதற்கு வெண்டிலேட்டரை சார்ந்திருக்கிறது என்றும் அதன் மூளை எவ்வாறு இறந்துவிட்டது என்பதையும் கூறினேன். தந்தை நிலைகுலைந்து போனார். எல்லா உதவியாளர்களையும் நான் வெளியே அனுப்பினேன். திடீரென்று ஒரு சிசிடிவி கேமராவின் பார்வையில் அறையைப் பார்த்தேன். கர்த்தர் எதையோ செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். உடனே நான் தேவனிடம், “ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டேன்.

உடனடியாக வேதத்தின் இரண்டு நிகழ்வுகள் என் ஞாபகத்திற்கு வந்தது. முதலாவது நிகழ்வில், இயேசு மரித்துபோன பெண் அருகே இருந்த அனைவரையும் வெளியே அனுப்புகிறார் மேலும் அந்த பெண்ணுக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார் என்றும், இரண்டாவது நிகழ்வில் எலியா தீர்க்கதரிசி குழந்தையை மேல் அறைக்கு கொண்டுச் சென்று ஜெபித்து அதை உயிர்பித்தது. நான் தேவனைப் பார்த்து, “கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்?” என்றேன்.

“உயிர்பெற வேண்டி குழந்தை மீது தீர்க்கதரிசனம் உரை!” என்றார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உயிர் பெற நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்.  உடனடியாக குழந்தை தன்னுடைய முதல் மூச்சை இழுத்தது, மேலும் அழ ஆரம்பித்தது.   “அசைந்திடு” என்று நான் மீண்டும் தீர்க்கதரிசனம் உரைத்தேன். உடனடியாக குழந்தை அசைந்தது, காலை உதைத்தது. குழந்தை இப்போது தானாக சுவாசித்தது. நான் resuscitate செய்வதை தொடர்ந்தேன்.

இதை குழந்தையின் தகப்பனுக்கு எடுத்துச் சொன்னேன், அவரோ மிகவும் கோபப்பட்டார், “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், என்னுடைய குழந்தை மறித்துபோனது என்றீர்கள் இப்போதோ உயிருடன் இருக்கிறது என்கிறீர்கள். என்ன இது, நீங்கள் எங்களோடு விளையாடுகிறீர்களா? என்று கோபமாக கேட்டார்.

நான் அவரிடம் சொன்னேன், என்னுடைய எந்த செயலாலும் அல்ல மாறாக உயிருள்ள ஒரே தேவனாகிய இயேசு கிறிஸ்து வின் வல்லமை தான்  மரித்துபோன இந்த குழந்தைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது. குழந்தையை மேல் நிலை பராமரிப்புக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து போகும்படி சொன்னேன், அப்படியே அந்த குழந்தை உயிருடன் உயர் மையத்திற்கு மாற்றப்பட்டது.

பெயரளவில்  (உலகபிறகாரமாக) வாழும் கிறிஸ்தவ வாழ்வை விட்டு விட்டு, நமக்காக தேவன் நியமித்திருக்கிற திட்டத்தின்படி (பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுதல்) வாழும்போதுதான் இது நடக்கும். உலக வாழ்க்கை என்பது அசுத்த ஆவியின் ஆட்சி, அதிகாரம், மற்றும் ஆதிக்கத்திற்கு அடிமையாக இருப்பது. இவைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் அற்புதங்களை காண விடுவதில்லை.

ஆனால் நாம் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும்போது (பிலேமோன் 1:6) கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கர்த்தருடைய வார்த்தை நம்மை ஆட்கொள்ளகூடிய ஒரு நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.

அவருடைய வெற்றியிலிருந்தும், அவருடைய ஒப்பற்ற வல்லமையின் மகா மேன்மையான மகத்துவத்திலிருந்தும் விசுவசிக்கிறவர்களாகிய நாம் வேலை செய்ய துவங்குவோம்.

உலகம் நமக்கு கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு, அவர் நமக்கு சொல்லி கொடுப்பதை பிடித்துக்கொள்வோம். நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். (லூக் 8:31)

Dr. Albert Jones AOJ

தானியேல் – II 28.01.2022 தேவ செய்தி

……. அவர்உங்களுக்குமுன்னேகலிலேயாவுக்குப்போகிறார்; அங்கேஅவரைக்காண்பீர்கள்;

மத் 28:7

இந்த செய்தியை விண்ணிலிருந்து வந்த கர்த்தரின் தூதன், மகதலேனா மரியாளுக்கும், மற்றொரு மரியாளுக்கும் இயேசு வைக்கப்பட்ட கல்லறையைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு தெரிவித்தான். இயேசு கலிலேயாவுக்கு போவார் அங்கே தன்னுடைய சீடர்களை அவர் சந்திப்பார் என்று. மரணத்திற்கு பிறகு உயிர்ப்பு உள்ளது என்பதை இயேசு தன் உயிர்ப்பின் மூலம்  நம் எல்லோருக்கு முன்பாக நிரூபித்துள்ளார். மரணத்திற்குப் பின் சரீரத்தின் உயிர்த்தெழுதலைத் தவிர நாம் இந்த பூமியில் இருக்கும் போது நம் ஆவியும் உயிர்த்தெழுதலை பெற முடியும்.

சவுல் – அப்போ 9:3-20 : இயேசுவை சந்தித்த பிறகு ஆன்மீக மரணத்திலிருந்து (பாவம், வெறுப்பு மற்றும் கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துவது)  உயிர்பிக்கப் பட்டான் மேலும் அதன் பின் அவன் தமிஷ்க்கு சென்றான். அங்கு அவனுக்கு பார்வை திரும்ப கிடைத்தது, அவன் ஞானஸ்ஞானம் பெற்றான் அதற்குபின் “கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று தேவாலயங்களில் பிரசங்கித்தான். அநேக நிரூபங்களை அவர் புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.

சகேயு – லூக் 19:2-10 – காட்டத்தி மரத்தில் சகேயுவை கண்டு இயேசு அவனோடு பேசினார். அதன்பின்னர் அவனும் மரணத்திலிருந்து (பாவம், மக்களை ஏமாற்றி வரி வசூலிப்பது, செல்வத்தை சேர்த்துவைப்பது) உயிர்பிக்கப்பட்டான், இரட்சிக்கப்பட்டான், மேலும் தன்னுடைய செல்வத்தில் ஏழைகளுக்கு உதவும் ஒரு சாதாரண வாழ்வை நடத்தினான்.

லாசர் – யோவா 11:1-45 – தன்னுடைய நண்பன் லாசர் வியாதிப்பட்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்க இயேசு பெத்தானியா சென்றார். அவர் அங்கு சென்றபின், லாசர் மரித்துவிட்டதாகவும், கல்லறையில் அவனை வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றும் அவருக்கு சொல்லப்பட்டது. இயேசு லாசரின் கல்லறைக்கு எதிரே நின்றார், கல்லை அகற்றுமாறு கூறினார், பின்னர் லாசரை வெளியே வருமாறு கட்டளையிட்டார். தன்னுடைய கால்களும் கைகளும் பிரேத சீலையால் கட்டப்பட்டவனாகவும், முகம் சீலையால் சுற்றப்பட்டவனாகவும் லாசர் வெளியே வந்தான்.

2005 ஆம் ஆண்டில்  எனது 52வது வயதில் நான் கூட ஆன்மீக மரணத்திலிருந்து உயிர்பிக்கப்பட்டேன். நான் ஒரு பாவம் நிறைந்த உலகபிரகாரமான வாழ்வை பணத்திற்கு பின்னால் ஓடி வாழ்ந்து கொண்டிருந்தேன். மனந்திரும்புவதற்கு எனக்கு கர்த்தர் கிருபைகொடுத்தார் அதன்பின் நான் ஒரு புதிய வாழ்வை துவங்கினேன். அன்று முதல் கர்த்தருடைய பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபட்டு வருகிறேன் மேலும் கர்த்தருக்காக நிற்கிறேன். இன்று முதல் என்னால் முடிந்தவற்றை அவருடைய ராஜ்யம் இந்த உலகில் வருவதற்காக நான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வாறு செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.

ஜெபம்: கர்த்தாவே பாவத்திற்கு மரிக்க எங்களுக்கு கிருபைதாரும் அதனால் எங்களுடைய அன்றாட வாழ்வில் நாங்கள் உயிர்தெழுதலை அனுபவித்து உம்முடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய எங்களை திடப்படுத்தும். ஆமேன்.

Sol. Leslie AOJ

தானியேல் –  II 27-01-2022 – தேவ செய்தி

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.

லூக்கா 17:3

நாம் திருத்தத்திற்கு விரோதமான யுகத்தில் வாழ்கிறோம். ‘முடியாது’ என்கிற நான்கெழுத்து வார்த்தை தற்கால மொழியாகிவிட்டது.  உங்கள் நம்பிக்கையின்மை கர்த்தருடைய நியாய தீர்ப்பை நிச்சயமாக கொண்டுவரும் என்று கிறிஸ்தவரல்லாத நண்பர்களுக்கு சொன்னால் அதை கேட்க அவர்கள் விரும்புவதில்லை. நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும் ‘திருத்தம்’ செய்வதை விரும்புவதில்லை. இது மிகவும் வருத்தத்தை தருகிறது ஏனென்றால் திருத்தம் ஆத்துமாவுக்கு நன்மைதரும். இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; (நீதி 10:8) என்று சாலொமோன் சொல்லுகிறான்.

நம்முடைய சகோதரர்களை நாம் எப்பொழுது திருத்தலாம்?

சகோதர சகோதரிகளுடைய இரட்ச்சிப்பு கேள்விகுறியாக இருக்கும் போது நாம் அவர்களை திருத்தலாம்.

சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபி 3:12). இந்த வசனம் சகோதரர்களுக்கு சொல்லப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைக்கும் நாம் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இது தனிப்பட்ட முறையில் மட்டும் அல்ல சபையாகவும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு சகோதரன் அல்லது சகோதரி அவிசுவாச  வாழ்க்கை வாழும்போதோ அல்லது  அவருடைய விசுவாசத்தின் உண்மைத் தன்மை கேள்விகுறியாக இருக்கும்போதோ நாம் அவரை விசாரிக்கலாம்.

அவர்களுடைய இருதயங்களை மென்மையாக்கவும், மனந்திரும்புதலுக்கு அழைத்துச் செல்லவும், கர்த்தருடைய கோபத்திலிருந்து அவர்களை காப்பாற்றவும் ஆவியானவர் பயன்படுத்துவது உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளைத்தான்.

மனந்திரும்பாத பாவத்தின் ஆபத்தை உணர்ந்த இயேசு நம் ஒருவரை ஒருவர் திருத்தச் சொல்லியிருக்கிறார். மத் 18:15-16 இல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எதிராக பாவம் செய்யும் பொழுது அவனை திருத்துவதற்கான வழிமுறைகளை இங்கு சொல்லுகிறார். பாவத்தின் இயல்பை பற்றி இயேசு இங்கு வெளிப்படுத்த வில்லை. ஆனால் பாவம் செய்தவர் அந்த பாவத்திற்காக மனந்திரும்பாவிட்டால் அந்த நபரை கிறிஸ்துவில் ஒரு சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ கருதக்கூடாது என்பதை தெளிவாக கூறுகிறார்.  பின்னர் பாவம் செய்தவர் எப்படி தன்னுடைய குற்றத்தை உணருவார்? அவனை திருத்தக்கூடிய ஒரு வார்த்தை தேவை. தனிபட்ட முறையில் அவரைடைய குற்றத்தை நாம் உணர்த்த வேண்டும். (15), கேட்காத பட்சத்தில் இரண்டொரு மனிதர்களோடு அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்தலாம். (16).

நமக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்படுகிறது. சில வேளைகளில் பதில் கிடைக்காததுதான் ஆனால் அதுதான் சிறந்தபதிலாகவும் இருக்கிறது. கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்.

மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. – நீதி 19:11

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். – நீதி 10:12

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 1பேது 4:8

ஜெபம்:

கிருபையும் மகா இரக்கமும் நிறைந்த பரலோக பிதாவே, உமக்கு எதிராக சகோதரர்கள் பாவம் செய்யும்பொழுது அவர்களை திருத்துவதற்கான இருதயத்தை எங்களுக்கு அளித்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தேவனே, எங்களுக்கு ஞானத்தை தாரும் அதனால் சோர்வடைந்த பரிசுத்தவான்களின் நம்பிக்கையைப் புதுபிக்க நாங்கள் பயன்படுத்தும் திருத்ததின் வார்த்தைகள் அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக, சில வேளைகளில் எங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு உதவி செய்யாமல், துன்பத்தை தரகூடியதாக கூட இருக்கலாம். எனவே எப்போது அவர்களை உணரவைக்க வேண்டும் எப்போது காணாமல் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ள உம்முடைய ஞானத்தை தாரும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.

Sol.Olivia Capitola J AOJ

தானியேல் – II 26-01-2022 – தேவசெய்தி

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், 

(லூக் 16:10).

மத் 25:21-25 இல் வரும் தாலந்து பற்றிய உவமை மற்றும் அதில் வரும் மூன்று சேவர்களுடைய கண்ணோட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாளி முதல் சேவனகனுக்கு ஐந்து தாலந்துகளையும், இரண்டு தாலந்துகள் இரண்டாவது சேவகனுக்கும் மற்றும் ஒரு தலந்து மூன்றாவது சேவகனுக்கும் கொடுத்தார். ஐந்து தாலந்துகள் கிடைத்த சேவகன் உடனே ஒரு தொழில் துவங்கினான் தன்னிடமிருந்த ஐந்துடன் இன்னும் ஐந்து தாலந்துகளை சேர்த்தான். இரண்டாவது சேவகனும் இரண்டை நான்காக்கினான். ஒரு தாலந்தைப் பெற்றவன் ஒன்றும் செய்ய வில்லை. தன்னுடைய நேரத்தையும் அவன் வீணடித்தான். பயணத்திலிருந்து வீடுதிரும்பிய முதலாளி தன்னுடைய சேவகர்களை அழைத்தான், தான் அவர்களிடம் கொடுத்த தாலந்துகளைப் பற்றி அவர்களிடம் கேட்டான். முதலாவது மற்றும் இரண்டாவது சேவர்களின் பதிலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் இருவரையும் பொறுப்புள்ள மேல் பதவிகளில் வைத்தான். மூன்றாவது சேவகனோ தன்னுடைய தாலந்தை ஞானமாக பயன்படுத்த வில்லை எனவே அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டான். அவன் சோம்பேரியாக இருந்ததற்காக அவனை தண்டித்தான். இந்த உவமையின்படி நேர்மையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் வாழ்வில் முன்னேறுவார்கள். நம்பகமான சேவகர்களை இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.

மத் 24:45-51 – ஒரு ஞானவானை பார்க்கிறோம், லூக் 12:42-48 நாம் ஒரு விவேகமான மற்றும் உண்மையுள்ள காரியதரிசியை பார்கிறோம்.

இந்த மூன்று உவமைகள் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றும் மேலும் இவைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்றும் பார்ப்போம். இந்த மூன்று உவமைகளும் நம் ஆண்டவரக்கிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். இவைகள் மூலம் நமது எஜமானரான இயேசு நம் நித்திய வாழ்வு, வாழ்வில் நம்பகத்தன்மை, நேர்மை, விவேகமாக வேலைசெய்தல் போன்றவைகளைப்பற்றி பேசுகிறார்.  இந்த வாழ்வில் நாம் தோற்றுப்போனால் அழுகையும் பற்கடிப்பும்தான் முடிவில் இருக்கும்.  இவ்வுலகில் நாம் சம்பாதிக்க கூடிய அல்லது வைத்திருக்கும் எல்லா செல்வத்தையும் விட நித்திய வாழ்வு மிகவும் மதிப்புமிக்கது என்பதை உண்ர்கிறேன்.

நாம் இரகசிய வருகைக்கு தயாராக இருக்கிறோமா? இல்லையென்றால் நம் வாழ்வில் தேவையான திருத்தங்களைச் செய்வோம்.

நான் ஒரு தொழில் செய்துகொண்டிருந்தேன். லாபம் ஈட்டுவதற்கு நிலையான சட்டமோ விதிமுறைகளோ கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய லாப பங்கை மிகக் குறைந்த விகிதத்தில் சேகரித்தேன். சில நேரங்களில் என்னையே நான் ஒரு பெரிய முட்டாள் என்று நினைத்துக்கொள்வேன். அதனால்தான் என் துறையில் இருந்த மற்றவரகளைப்போல என்னால் அதிக லாப்ம் எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் எடுப்பதில் நான் நேர்மையாக இருந்தேன். இப்படி கொள்கைகளை பின்பற்றி வாழ தூண்டியது எது என்று நினைத்து ஆச்சரியபடுகிறேன். நான் செய்துவரும் தொழில், 1980 இல் ஒரு இலாபகரமான தொழிலாகும். நான் அங்கீகரிக்கப்பட்ட பயண நிறுவனமான IATA ஐ நடத்திக்கொண்டிருந்தேன். சர்வதேச உரிமம் பெற்ற ஏஜென்சிகள் மட்டுமே டிக்கட்டுகளை வழங்க முடியும். அந்த நேரத்தில் உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்ளுக்கும் டிக்கெட்டுகளை வழங்க IATA நபர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டனர். என்னுடைய 65ஆவது வயதில் , 2017 இல் என்னுடைய தொழிலை  நல்ல விலைக்கு விற்றேன். இதை ஏன் என்னால் செய்ய முடிந்தது என்றால் நான் கர்த்தருடைய வேலையில் இருக்க ஆசைப்பட்டேன். 2018 மற்றும் 2019 இல் கேரளாவில் வெள்ளம் வந்தது. 2019 முடிவில் கொரோனா தொடங்கியது. இதனால் இந்தியாவிலும் உலகிலும் சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிகம் முற்றிலும் முடங்கியது. 2900 IATA ஏஜென்டுகள் இந்தியாவிலும் அதில் 275 ஏஜென்டுகள் கேரளாவில் மட்டுமே உள்ளனர். இவர்கள் எல்லாரிலும் நஷ்டம் இல்லாமல் தப்பியது நான்மட்டுமே. நான் சிறியவற்றில் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த காரணத்தால் கர்த்தர் என்னை பாதுகாத்தார். நான் ஒரே ஒரு ஊழியருடன் எனது அலுவலகத்தை கேரளத்தில் துவங்கினேன். பின்னர் வெவ்வேறு நகரங்களில் 21 ஊழியர்களுடன் மூன்று அலுவலகங்களை உருவாக்கினேன்.

2018 ஆம் ஆண்டில் வர இருந்த மோசமான நிலையை 2017 இல் என்னால் யூகிக்க முடியவில்லை.  ஆனாலும் மற்றவர்கள் துன்பப்படும் பெரிய இழப்பை நான் அனுபவிக்க முடியாதவாறு கர்த்தர் என்னைக் காப்பாற்றினார், என்று நான் இப்போது முழுமையாக ந்ம்புகிறேன். கர்த்தர் எப்படி தன் குழந்தைகளை நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை நான் கண்டு வியக்கிறேன். அல்லேலூயா! ஆமேன்!

Sol John Philip          

தானியேல் – II 25-01-2022 – தேவ செய்தி

அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்

(லூக் 17:5).

ரோம 1:17 – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் மேலும் எபி 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்றும் வாசிக்கிறோம்.  ரோம 12:3 ன் படி, அவனவனுக்கு பகிர்ந்ததளித்த விசுவாசத்தின்படி நாம் அதை பாதுகாக்கலாம், இழக்கலாம் அல்லது அதிகப்படுத்தலாம். நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்த நாம் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது.

நம் அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அற்புதங்களை பட்டியலிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக, நமது நம்பிக்கையை சோதனை செய்ய வரும் எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்பதற்கு போதுமான அவருடைய சர்வ  வல்லமையை நாம் நினைவுபடுத்திக்கொள்ள முடியும்.

நான் 1989 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, என் வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்திருந்தேன். என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல கர்த்தருடைய மனிதனுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறந்தான் தெரிந்தது என் கணவர் கர்த்தரில் நம்பிக்கையில்லாதவர் ,என்றும் கர்த்தரைப் பற்றிய காரியங்களில் எந்த ஈர்ப்பும் இல்லையென்றும் அறிந்தேன். என்னுடைய உள்ளம் உடைந்தது ஆனால் கர்த்தர் தன்னுடைய வார்த்தையினால் என்னை பெலப்படுத்தினார்,  மேலும் கைவிடாமல் விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு கூறினார்.

நான் ஒருபோதும் என்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தவில்லை, மாறாக பாசமுள்ள மற்றும் புரிந்துகொள்ளும் மனைவியாக இருக்க முயற்சித்தேன், எல்லா நேரங்களிலும் கணவருடைய இரட்சிப்புக்காக ஜெபித்து விசுவாசித்தேன். 25 ஆண்டுகளுக்கு பின் கர்த்தர் அவரை தொட்டார் மேலும் அவருடைய வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுது நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக் கர்த்தருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம். என்  விசுவாசத்தை தக்கவைத்துக்கொள்ள தேவன் எனக்கு உதவினார் மேலும் அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்தார்.

நம்முடைய சூழ்நிலையை நாம் பார்க்கும்போது நமது விசுவாசம் நம்மை தோல்வி அடையச் செய்யலாம. இயேசுவின் மீது தன்னுடைய பார்வை இருந்த வரையில் பேதுரு கடல் மீது நடந்தார். ஆனால் ஒருமுறை கடல் கொந்தளிப்பைப் பார்த்தபோது அவன் மூழ்க ஆரம்பித்தான். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நம் விசுவாசத்தை தக்க வைத்துக்கொள்ள கர்த்தர் நம்க்கு எல்லாவற்றையும் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.

கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது நிச்சயம் நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கும். கர்த்தருடைய வசனத்தை நாம் தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும் முடிந்தால் சில வசனங்களை மனப்படம் கூட செய்துவைத்துக்கொள்ளலாம். நம்முடைய விசுவாசத்தை நிறப்ப வேதம் ஒரு பெரிய ஆதாரம்.

ஆவியிலும் உண்மையிலும் கர்த்தரை துதித்து ஆராதிப்பது ஒரு உறுதியான, தடுமாறாத விசுவாசத்தை கட்ட உதவும். நாம் விசுவசிக்கும் போது கர்த்தருடைய மகிமையை காண்போம். நமது நம்பிக்கை நிச்சயமாக உலகை வெல்லும்.

ஜெபம்:  எங்களுடைய விசுவாசத்தை துவக்குபவரும், அதை முடிவுக்கு கொண்டுவருபவருமான எங்கள் அன்பின் பரலோக பிதாவே, உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்,  உம்மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உமது வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த காலத்தில்  நீர் எங்களுக்குச் செய்த மாபெரும் அறிபுதங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு நம்பிக்கையில் வலுவாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே. ஆமேன்.

Sol. Jeslyn Jeyakumar