நாள்: 06-02-2023
பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் மற்றும் அக்கினியில் ஞானஸ்நானம்.
” யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக : நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார் , அவருடைய பாத ரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல , அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். “
லூக்கா 3 : 16
இந்த வசனம் , இயேசுகிறிஸ்துவினால் இரண்டு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதை தெளிவாகக் கூறுகிறது. நாம் இதற்கு அடுத்த வசனத்தையும் சேர்ந்து வாசிக்கும் போது அர்த்தம் தெளிவாகிறது.
லூக்கா 3 : 17 ” தூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.”
இதில் கோதுமைக்கும் பதருக்குமுள்ள ஒப்புமை குறிப்பிடப்படுகிறது. கோதுமை இயேசுவை விசுவசித்து பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுபவர்களையும் பதரானது கிறிஸ்துவை விசுவசிக்காதவர்களையும் சித்தரிக்கிறது. தானியத்தை புடைத்து கோதுமையையும் பதரையும் பிரித்து பதரை எரிப்பார். யாரெல்லாம் கிறிஸ்துவை விசுவசிக்கவில்லையோ அவர்களுக்கான தீர்ப்பு இது. இயேசுவின் நாள், பிதாவின் நாள் ஆகிய இரண்டு யுகங்களைப்பற்றி இது பேசுகிறது. இயேசு தேவாலயத்தில் கர்த்தரின் அநுக்கிரக வருஷத்தினை அறிவிக்கவே வந்தேன் என்று பிரசங்கித்தார். பழிவாங்கும் நாளைக் குறித்து வாசிப்பதற்கு முன் அதை நிறுத்தினார்.
அநுக்கிரக வருஷம் என்பது இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பின் மேலுள்ள விசுவாசத்தினால் மக்களை மீட்பதற்குரிய திட்டத்தை பற்றியதாகும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படும் வாழ்க்கையை நடத்துவார்கள். அவரை தேவனாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இறுதிக் காலத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு எரியும் நெருப்பில் போடப்படுவார்கள்.
எசாயா 61 : 2 ல்
” கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும் நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும் , துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் ,” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆவியில் ஞானஸ்நானம் அக்கினியில் ஞானஸ்நானம் இரண்டும் வெவ்வேறு காலக்கட்டங்களில் உள்ளன. இந்த இரண்டு ஞானஸ்நானங்களும் விசுவாசிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அக்கினியில் ஞானஸ்நானம் பெறுவதற்காக ஜெபிக்கிறார்கள். பெந்த கோஸ்தே நாளில் இயேசு வாக்குத்தத்தம் பண்ணியபடி , தங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வரும்போது அக்கினி அபிஷேகம் பொழிவதாக விசுவாசிக்கிறார்கள்.
அப்போஸ்தவர் 2 : 3 – 4
” அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிளந்திருக்கும் நாவுகள் அவர்களுக்கு காணப்பட்டு , அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. ” இங்கே அவர்கள் நாவுகள் அக்கினிமயமாக இருந்ததைக் கண்டார்கள். இது நெருப்பு அல்ல, ஆனால் நெருப்பைப் போல இருந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல இறங்கினார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் புறா அல்ல. அவர் புறாவோ, அக்கினியோ அல்ல. கிறிஸ்துவை இரட்சகராக யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அல்லது மறுக்கிறார்களோ அவர்கள் மீது வரும் தீர்ப்பே அக்கினியில் ஞானஸ்நானமாகும்.
மத்தேயு 13 : 40 – 42
” ஆதலால் , களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறது போல , இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து , அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். “
ஓசியா 8 : 14 ” இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான் ; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப் பண்ணுகிறான். ஆனாலும் நான் அதன் நகரங்களிலே அக்கினியை வரப்பண்ணுவேன் ; அது அவைகளின் கோயில்களைப் பட்சிக்கும்.”
இன்னும் நிறைய வசனங்கள் அக்கினி என்பது தீர்ப்பு என்று நிரூபிக்கின்றன.
யோவான் 15 : 6
” ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் , வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு தொலைந்து போவான் , அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள் , அவைகள் எரிந்து போம் “
மல்கியா 4 : 1 ” இதோ சூளைகளைப் போல எரிகிற நாள் வரும். அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள். வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும். அது அவர்களுக்கு வேரையும் கொப்பரையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். “
விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு நாம் மிகவும் பாக்கியவான்கள். இந்த கிருபையுகத்தின் கடைசி காலத்தின் முடிவில் நாம் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம். ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது நம்பிக்கையான ஆசீர்வாதமாகும். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் பெற்றபோது நாம் ஆவியில் ஞானஸ்நானம் பெறுகிறோம். மேலும் தொடர்ந்து ஆவியால் நிரப்பப்படுவது ஒரு தொடர்ச்சியான செயலாகும். அக்கினியில் ஞானஸ்நானம் என்பது ஒரு தீர்ப்பு. இது ஆலயமாக இருக்கிற நமக்கானதல்ல.
ரோமர் 8 :1 ” ஆனபடியால் , கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடகாகிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பல்ல.”
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆமென்.
Sol. சலோமி குரியன்.
