தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-09-2023

தேவனை அறிகிற அறிவு

1 சாமுவேல் 2 : 12 , 21
” ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை
அப்படியே கர்த்தர் அன்னாளை கடாட்சித்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரர்களையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். “

ஏலி என்பவன் கர்த்தருடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஆசாரியன். அப்படி ஊழியம் செய்யக்கூடிய ஏலியின் பிள்ளைகள் பேலியாளின் மக்களாயிருந்தார்கள் என்று வாசிக்கிறோம் . காரணம் அவர்கள் கர்த்தரை அறியவில்லை. ஆனால் எப்ராயிம் மலை தேசத்தில் காணப்படுகிற எல்கானா என்ற மனிதனுக்கும் அன்னாளுக்கும் பிறந்த மகன் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு ஒரு தீர்க்கத்தரிசியாக மாறினான்.

இன்றைய நாளில் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற அநேக ஊழியர்களுடைய பிள்ளைகள், தேவனை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வில்லை. கர்த்தரை அறிய வேண்டிய பிரகாரமாய் அவர்கள் அறியவில்லை. அவர்களுக்கு ஆலயம் தெரியும், ஆராதனை தெரியும். ஒழுங்குமுறைகள் தெரியும் ஆனால் கர்த்தரை தெரியாது. இது மிகவும் வேதனைக்குரியது.
நம்மை நாமே இப்போது கேட்டுக் கொள்வோம். நான் கர்த்தரை அறிந்திருக்கிறேனா? கர்த்தரை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் அவரை அறிந்திருக்கிறோமா?
நாம் ஒருவரை அறிவதற்கும் அவரைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு. நான் இப்போது உங்களைப் பார்த்து ஜவஹர்லால் நேருவைப் பற்றி தெரியுமா என்று கேட்டால் ஆம் தெரியும் என்பீர்கள். ஆனால் இதே கேள்வியை அவரது மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் கேட்டால் அவர் என்னுடைய அப்பா, எப்படி தெரியாமலிருக்கும் என்பார். நாம் ஜவஹர்லால் நேருவை பற்றி அறிந்திருப்பதற்கும் அவரது மகள் அவரை அறிந்திருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இப்போது நான் உங்களிடம் கேட்கக்கூடிய கேள்வி உங்களுக்கு கர்த்தரை தெரியுமா? அல்லது கர்த்தரைப்பற்றி தெரியுமா? இன்றைய காலகட்டத்தில் இயேசுவைப்றி அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த உலகத்தில் வந்தார், சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தார் என்று அவரை அறியாதவர்கள் கூட அவரைப் பற்றி பேசுவார்கள்.

இயேசு நம்முடைய தந்தை. நம்முடைய உலக ரீதியான தந்தையை அறிவதைவிட இயேசுவை அதிகமா அறிந்திருக்கிறோமா? அவரை அறிகிற அறிவினாலே நிறைந்திருக்கிறோமா?

2 கொரிந்தியர் 2 : 14
“கிறிஸ்துவுக்குள் எப்போதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி , எல்லா இடங்களிலும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். “


பிலிப்பியர் 3 : 8
” கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். “

கொலோசையர் 1 : 9 – 10
“நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்கு பிரியமுண்டாக அவருக்கு பாத்திரராய் நடந்து கொள்ளவும் “

இந்த நாளில் கர்த்தர் தம்மை அறிகிற அறிவினாலே நம்மை நிரப்புவாராக. 1 பேதுரு 1 : 2
” தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது என்று எழுதப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 3 : 18
” நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.”

லூக்கா : 24 – 16
” ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. “


இயேசு உயிர்த்தெழுந்த போது திருஷ்டாந்தமாக தான் இருப்பதை காண்பிக்கிறார். எம்மாவுக்கு சீடர்கள் போகிற போது இயேவும் அவர்களோடு கூட நடந்தார். ஆனாலும் சீடர்கள் அவரை அறியாதிருந்தார்கள். அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்ததால் அவரை அறிய முடியவில்லை.

இயேசு எப்போதும் நம் கூடவே இருக்கிறார். இருந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் நீங்கள் அவரை அறிகிறீர்களா? அல்லது ஏலியின் பிள்ளைகளைப் போல இருக்கிறீர்களா? சபையின் சடங்காச்சாரங்களை முறையாக செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கர்த்தரை அறிகிறோமா? நம்மை விடுவோம். நம்முடைய பிள்ளைகளை கர்த்தரை அறியும்படி வளர்க்கிறோமா? சிந்தித்து பார்ப்போம்.

லூக்கா 24 : 30 – 31
“அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து அதைப்பிட்டு அவர்களுக்கு கொடுத்தார். அப்பொழுது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள். “
இயேசு ஜீவ அப்பம் நானே என்று சொல்கிறார். வார்த்தையான இயேசு நானே அப்பம் என்கிறார். அவரது வார்த்தைகளை, வசனங்களை நாம் பிட்கும்போது வசனங்களை நாம் உண்ணும் போது நாம் அவரை அறிந்து கொள்ள முடியும்.

நமது வாழ்வில் எவ்வளவு நேரம் கர்த்தருடன் செலவழிக்கிறோம்? அவருடைய வசனங்களுடன் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? நாம் கர்த்தரோடு தனியாக நேரம் செலவழிக்க வேண்டும். அவரது வசனங்களை தியானிக்கும் போது அவர் நம்மீது வைத்திருக்கக் கூடிய மேலான அன்பை உணர முடியும். அவர் எவ்வளவு அதிசயமானவர், எவ்வளவு வல்லமையுள்ளவர் எவ்வளவு இரக்கம் நிறைந்தவர் என்பதை உணர முடியும். அவரை அறிய முடியும்.

ஜெபம்:


எங்களை நேசிக்கிற அன்பு தெய்வமே, நீர் எம்மோடு பேசிய வார்த்தைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். உம்மை அறிகிற அறிவில் வளரவும், உம்முடைய அன்பை உணரவும், உமது வசனங்களை தியானித்து அதன்படி வாழவும் கிருபை பாராட்டுவீராக. இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறோம்.ஆமென்

Sol. Dr. பெட்ரீஷியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *