நாள்: 06-03-2023
பெருக்கத்தின் தேவன்
எபிரேயர் 6 : 16
” நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன். “
நம்முடைய தேவன் பெருக்கத்தின் தேவன். அவர் நம்மை பெருகச் செய்கிற தேவன்.
ஆதியாகமம் 1 : 28 ல்
” நீங்கள் பலுகிப் பெருகி , பூமியை நிரப்பி , அதைக் கீழ்ப்படுத்தி , சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி , தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் .”
ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்த கர்த்தர் ஜல பிரளயத்திற்குப் பிறகு நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை நாம் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 26 : 24 ல் கர்த்தர் ஈசாக்கைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து , உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
1 பேதுரு 1 : 2 ல் அவர் கிருபையையும், சமாதானத்தையும், அன்பையும் ,தேவனை அறிகிற அறிவையும் பெருகச் செய்கிறார் என்பதையும் ,
சங்கீதம் 71 : 21ல் அவர் நம்முடைய மேன்மையை பெருகப்பண்ணுகிறார் என்பதையும் ,
நீதிமொழிகள் 10 : 27 ல் தேவன் நம்முடைய ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிறார் என்றும் வாசிக்கக் கேட்கிறோம்.
அருமையானவர்களே , கர்த்தர் நம்மை பெருகப் பண்ணுகிற தேவனாயிருக்கிறார். அவர் பெருகச் செய்ய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு சில காரியங்கள் உண்டு.
முதலாவதாக நாம் ஆதியாகமம் 22 ம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமை மோரியா என்னும் மலைக்குப்போய் ஈசாக்கை பலியிடு என்று சொன்னதும் அதற்குக் கீழ்படிந்து ஆபிரகாமும் மோரியா மலைக்குச் சென்று ஈசாக்கை அவர் பலியிடுவதற்காக பீடத்தில் கிடத்தியபோது தேவதூதன் வந்து ஆபிரகாமைப் பார்த்து ஆபிரகாமே உன்னுடைய ஏக புதல்வன் என்றும் பாராமல் அவனை எனக்கு ஒப்புக் கொடுத்ததினால் நீ நிச்சயமாக தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை அறிந்து கொண்டேன் என்று சொல்லி அவர் ஆசீர்வதிக்கிறார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவையெல்லாம் நமக்கு கூடக் கொடுக்கப்படும் என்று மத்தேயு 6 : 33 ல் சொல்லப்படுகிறது நம்முடைய முதலானவற்றை கர்த்தருக்கு கொடுக்கும்போது அவர் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறார்.
நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஐந்து அப்பம் இரண்டு மீன்களை பலுகிப் பெருகச் செய்து அநேக ஜனங்களுக்கு உணவளித்ததைப் பார்க்கிறோம். நம்மிடம் இருக்கக்கூடியவற்றை கர்த்தரிடம் கொடுப்போம். அவர் அதை பலுகிப் பெருகச் செய்வார்.
தேவன் நம்மைக் கொண்டு ஒரு பெரிய பெருக்கத்தை இந்திய தேசத்திலே உருவாக்குவாராக. அவர் பெருக்கத்தின் தேவன். நம் மூலமாக அணி சபைகள் பெருகுவதாக. நம்மூலமாக வரங்களின் பள்ளிகள் பெருகுவதாக. நம்மூலமாக தேவ வசனங்கள் பெருகுவதாக. நம்மூலமாக கிருபைகள், அற்புதங்கள் ,ஆபிஷேகம் பெருகுவதாக.
எசாயா 54 : 3 ன் படி நீ வலதுபுறமும் இடதுபுறமும் இடங் கொண்டு பெருகுவாயாக என்ற வார்த்தையின்படி நம்மை இந்த தேசத்திலே பெருகப்பண்ணுவாராக . ஆமென்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, நாங்கள் ஒவ்வொரு நாளும் அபிஷேகத்திலும் ஆவியிலும் பெருக எங்களுக்கு உதவும். எங்களிடமிருக்கின்ற குறைகளை நீக்கி நிறைகளை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். அவற்றைப் பெருக்க எங்களுக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.
Sol. Dr. பெட்ரீஷியா.
