நாள்: 30-10-2022
ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் சவால்களை சந்திக்கும்போது , பலமுறை தன் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள தவறிவிடுகிறார். ஆனால் இயேசுகிறிஸ்து நம்முடைய கடினமான நேரங்களில் நமக்காக கவனம் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதைத் தாங்கக்கூடிய பலத்தையும் தருவதனால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
எபிரேயர் 2 : 18 ல் ” ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதனாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ” என்று எழுதப்பட்டிருக்கிறது .

நமக்குத் தெரியும் இயேசு இந்த உலகத்தில் இருக்கும்போது நம்முடைய நிமித்தம் அவர் எவ்வளவு துன்பப்பட்டார் என்று. தனக்கு கடினமானதாக இருந்த போதிலும் நமக்காக இந்த பாத்திரத்தை குடித்தார். அவ்வாரே தம்முடைய பிள்ளைகளும் இந்த பூமியில் இருக்கும்போது என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். அவர்கள் என்ன சோதனைக்குட்படுவார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறார். நாம் என்ன எதிர்கொள்கிறோமோ அதைப்பற்றி ஒரு நாளும் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் நாம் தனியாக இல்லை வல்லமைமிக்க கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்று விசுவசிக்க வேண்டும். அவர் எப்போதும் நம்மை கவனித்துக் கொண்டும் , நமக்காகவும் நின்றுகொண்டிருக்கிறார். நம்முடைய குழந்தைகள் பிரச்சனைகளில் இருக்கும்போது நாம் அவர்களை தனியாக விடுவதில்லை. அதுபோலவே கர்த்தரும் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை. நமது கடினமான நேரங்களில் நாம் அவரை நோக்கி ஜெபிக்க வேண்டுமே தவிர கவலைப்படக்கூடாது.
என்னுடைய சொந்த அனுபவத்தை கூறுகிறேன். ஒருமுறை என் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டேன். ஆனால் எனக்கு நடந்த எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். என்னைப் பலப்படுத்துகிறவரும், எனக்கு தைரியம் கொடுப்பவரும் , என்னை பின்னாலிருந்து பார்த்துக் கொள்பவரும் அவர் ஒருவரே.
சங்கீதம் 20 : 1,2 ” ஆபத்து நாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக,
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசை அனுப்பி , சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக ” என்று சொல்கிறது.
கர்த்தர் நம்முடைய இருதயத்தை நன்றாக அறிந்திருக்கிறார். அவரை நாம் அழைக்கும் போது நமக்கு பதில் தருகிறார். அவர் வாக்குத் தத்தத்தை ஒருபோதும் உடைப்பதில்லை.அவரது வாக்குத்தத்தம் என்றென்றும் உள்ளவை. நம் வாழ்க்கையில் என்ன நிலைமை வந்தாலும் நாம் கவலைப்படக்கூடாது. ஆனால் எப்போதும் அவரது வார்த்தைகளை பற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒருபோதும் , கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை மறக்கக் கூடாது. நாம் தனிமையில் இல்லை.
கர்த்தருடைய வார்த்தையின்படி, அனைவருடைய வாழ்க்கையிலும் சவால்கள் என்பவை ஒரு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. கர்த்தர் அவற்றை நம்முடைய வாழ்க்கையில் , பரிசுத்த ஆவியின் கனிகளை வளர்த்துக் கொள்ளவும் , கர்த்தருடைய வார்த்தையில் வளரவும் , ஆவியில் அதிகமாக முதிர்ச்சி அடையவும் அனுமதிக்கிறார். கடினமான சூழ்நிலைகள் நம்மை ஆவியில் பலப்படுத்துகின்றன. அவை கர்த்தருடனான நெருக்கத்தை தருகின்றன.
ஜெபம்
பிதாவே, என்னை முழுவதுமாக உம்முடைய திருக் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னுடைய பிரச்சனைகளின் போது என்னுடன் கூட இருப்பதற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே உம்முடைய தெய்வீக வழிகாட்டுதலுக்கு நன்றி.
ஆமென்.
Sol. ரேணு சோலங்கி
