தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-04-2023

உலகமெங்கிலும் நற்செய்தி  அறிவிக்கப்பட வேண்டும்.

இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் “

லூக்கா 2:10

” சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக் கொடுக்கும்போது , நீங்கள் என்ன பேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலும் இருங்கள். அந்த நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல. பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.”

மாற்கு 13 : 10 – 11

ரோமர் 10 : 13 – 15  அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை ?

கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் தான் இரட்சிக்கப்படுவார்கள்.

 யார் தொழுது கொள்வார்கள்? விசுவாசிப்பவர்கள் தொழுது கொள்வார்கள். எப்படி விசுவாசிப்பார்கள்? கேள்விப்படும் போது தான் விசுவாசிப்பார்கள் .

எப்படி கேள்விப்படுவார்கள் ? நற்செய்தி அறிவிக்கப்படும் போது கேள்விப்படுவார்கள்

மிக அழகாக நற்செய்தி அறிவிப்பதைப் பற்றி சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.

இந்தக் கால கட்டத்தில் தேவனல்லாதவர்களை தொழுது கொள்பவர்களை நாம் அதிகமாக காணலாம். கண்ணிருந்தும் காணாமல் , காதிருந்தும் கேட்காமல் வாயிருந்தும் பேசாமல் இருக்கிற விக்கிரகங்களை பக்தி சிரத்தையோடு தொழுது கொள்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஜனங்களுக்காகத்தான் கர்த்தர் நம்மிடம்  நீங்கள் உலகெங்கிலும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொல்கிறார். இயேசு என்ற நாமத்தை அல்லாமல் வேறொருவரைத் தொழுது கொள்கிறவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை.

மத்தேயு 28 : 19

” ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் , சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து ”  என்று வாசிக்கிறோம். 

இங்கு, இயேசு அழுத்திச் சொல்கிறார். இது  நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  நாம் முதலில் புறப்பட்டுப் போக வேண்டும் .

சுவிசேஷம் என்ற வார்த்தையை பிரித்துப் பாருங்கள்.” சு “

” விசேஷம் “. நமது வீட்டில் ஒரு சுபகாரியம் நடக்கும் போது அதாவது விசேஷம் நடக்கும் போது நாம் நம்மைச் சார்ந்த எல்லாருக்கும் சென்று மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுப்போம். அது போலத்தான் நற்செய்தி என்ற விசேஷத்தை அறிவிக்கும் போது மகிழ்வுடன் மக்கள்  எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். நம்முடைய விசேஷத்திற்கு நம்மைச் சார்ந்தவர்களுக்கு அழைப்புவிடுப்பதைப் போல கர்த்தரால் படைக்கப்பட்ட அவருடைய பிள்ளைகள் எல்லாருக்கும் நற்செய்தியை தெரிந்து கொள்ளும்படி நாம் அறிவிக்க வேண்டும். நற் செய்தி என்பது நல்ல செய்தி மட்டுமே. இப்போது  உலகத்தில் நாம் தினம்தோறும்  கேள்விப்படுவது எல்லாமே துற் செய்திகள் தாம். இப்படி துற்செய்திகளால் நிரம்பியிருக்கிற உலகத்திலுள்ள ஆத்துமாக்களுக்கு நல்ல செய்தியாகிய நற்செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டும்.

2 இராஜாக்கள் 7 :9 ல் நாம் வாசிக்கிறோம்.  சீரியாவின் ராஜா பினாதத் இஸ்ரவேலின் சமாரியாவை முற்றுகையிடுகிறார். அதனால் சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாகிறது. ராஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அப்போது  எலிசா வந்து நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல்கிறார். பிறகு  கர்த்தர்  சீரிய ராணுவம் கேட்கும் படியாக ஒரு பெரிய இரைச்சலை உண்டு பண்ணுகிறார். ராணுவத்தினர்  எல்லாவற்றையும் விட்டு ஓடிப்  போகிறார்கள். அதன்பிறகு அதைக்கண்ட குஷ்டரோகிகள் இது நற்செய்தி அறிவிக்கும் நாள் என்று சொல்லி சமாரியா மக்களுக்கு தெரியப் படுத்துகிறார்கள்.  அதன்பிறகு அவர்களது உணவும் எல்லா பொருட்களும்  சமாரியா மக்களுக்கு உதவுகிறது.

இதன்மூலம் கர்த்தர் நமக்கு ஒரு நற்செய்தியைச் சொல்கிறார். சீரிய ராணுவத்தை துரத்திய அவர் நமக்கு எதிரான சாத்தானையும் துரத்துகிறார். இது ஒரு விடுதலையின் செய்தி. நாம் அடிமையாக இருக்கத் தேவையில்லை. பஞ்சத்தில் சாகத் தேவையில்லை. பிசாசை இயேசு சிலுவையில் ஜெயித்ததன் நிமித்தம் நம்மை விடுவித்துவிட்டார்.

இன்று நாம் நற்செய்தி அறிவிக்கும் நாள். நாம் மௌனமாக இருக்கக்கூடாது நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார்.

எஸ்தர் ராஜாத்தி யூத ஜனங்களுக்காக ராஜாவிடம் போய் நின்றிருக்காவிட்டால் யூத ஜனங்கள் அழிக்கப்பட்டிருப்பார்களே. அன்று எஸ்தருக்கு கொடுத்த பொறுப்பை கர்த்தர் இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். காலம் தாழ்த்தாது  நாம் நற்செய்தி அறிவிக்க  செல்ல வேண்டும். நம்மை நம்பித்தான் ஒரு பெரிய பொறுப்பை நமக்கு ஒப்படைத்திருக்கிறார்.  நமது கரத்தில் குணமளிக்கும் வரத்தை வைத்திருக்கிறோமே, பிசாசுகளை ஓட்டும் வல்லமையை, சாபங்களை முறித்துப் போடும் வல்லமையை  வைத்திருக்கிறோமே. நாம் காலத்தை விரயம் செய்ய முடியாது . நமக்கென்று தந்திருக்கின்ற ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவோம்.  நம் அருகிலே எத்தனை ஆத்துமாக்கள் சுவிசேஷத்தை அறியாமலே தினமும் மரணித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கெல்லாம் நாம் தானே பொறுப்பு.

ஜெபம்.

அன்பின் பரலோகத் தகப்பனே, இந்த உலகத்திலே உம்மை அறியாத ஜனங்களுக்கு , உமது வழியைவிட்டு விலகியிருக்கிற ஜனங்களுக்கு , நற்செய்தியை அறிவிக்க கிருபை புரியும் . பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் மக்களுக்கு நாங்கள்  நற்செய்தியை அறிவிப்பதன் மூலம்  விடுதலையைத் தர கிருபை புரிவீராக  என்று  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் . ஆமென்.

Sol. Dr. பெட்ரீஷியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *