நாள்: 30-11-2023
ஜீவத்தண்ணீர மேலே பாய்கிறது.
ஆதியாகமம் 22 : 14 “ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துகொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.”
கர்த்தர் நம்மை பார்த்துக் கொள்பவர் , அவர் யெகோவா யீரே. அவருடைய சுவாசத்திலிருந்து உருவான படைப்பாகிய நாம், அவரில் உறுதியாக வேரூன்றும்போதுதான் நமது முழுமையையும் வாழ்வாதாரத்தையும் காண்கிறோம். அவர் தினம்தோறும் நம் இதயங்களையும் ஆன்மாக்களையும் தம் அன்பினாலும் நன்மையினாலும் நிரப்புகிறார். நாம் அவரில் வேரூன்றாதபோது, நாம் முழுமையற்றவர்களாகவும் அவருடைய பாதுகாப்பையும் பிரசன்னத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாயும் உணர்கிறோம்.
சங்கீதம் 23 : 6 ” என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”
சங்கீதம் 23 :1
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். “
கர்த்தருடன் இணைந்து வாழும்போது நமக்கு ஒரு குறைவும் ஏற்படாது. ஒரு கருணையுள்ள தந்தையாக, நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார். அவை பொருளாதாரம் சார்ந்ததான, உலக ரீதியாக, உறவு ரீதியாக இருந்தாலும் சரி, ஆவிக்குரிய வாழ்விற்கான அன்பு, ஆறுதல், குழந்தைகள், அமைதி, மகிழ்ச்சி, ஞானம், புரிதல், அறிவு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், வரங்கள், பரிசுத்த ஆவியின் கனிகள் ஆகியவையாக இருந்தாலும் சரி நமக்கு அதிகமாக வழங்குகிறார்.
எரேமியா 2 : 13
“என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்குள் வெட்டிக் கொண்டார்கள். “
நமது ஆன்மா, ஒரு கொள்கலனாக கர்த்தருடைய கொடைகளால் நிரம்பியிருக்க வேண்டும். அவை மற்றவர்களின் நலனுக்காக எல்லையில்லாமல் நிரம்பி வழிவதாக இருக்க வேண்டும். என்றாலும் நிஜத்தில், நமது அநீதியான செயல்களின் காரணமாக, நமது உள்ளத்தில் விரிசல்கள் உருவாகின்றன. இதன் விளைவாக கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வாதங்களை ஊற்றினாலும் அவற்றை நாம் இழக்க நேரிடுகிறது. நாம் அநீதியான நடத்தையில் ஈடுபடும்போது கீழ்க்கண்ட விரிசல்கள் வெளிப்படுகின்றன.
கர்த்தரை முழு இருதயத்துடன் நம்பத் தவறுவது,
கர்த்தரைவிட பிறரை நேசிப்பது அல்லது முதன்மைப்படுத்துவது ,
நமக்கான பெருமையை நாமே கூறிக்கொள்வது ,
குற்றம் புரிவது, பிறரை காயப் படுத்துவது, பிறரை
மன்னியாமை ,பெருமை,
வெறுப்பு கொள்வது,
தெய்வீகமற்ற செயல்களில் ஈடுபடுதல்,
நம் பலத்தை நம்புவது, உலக ஞானத்தில் கற்பது,
குடும்பங்களில் தெய்வீக ஒழுங்கை புறக்கணித்தல்,
முதலியன.
யோவான் 7 : 37 – 38 “ஒருவன் தாகமாயிருந்தால், என்னிடத்தில் வந்து பானம் பண்ணக் கடவன். வேத வாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.”
இந்த விரிசல்களைச் சரிசெய்ய, நாம் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்ப வேண்டும், அவருடைய ஒளி நமக்குள் இருக்கும் இருளை மாற்ற அனுமதிக்க வேண்டும். மனந்திரும்புதலின் மூலம், கர்த்தர் நம்முடைய குறைபாடுகளை அவருடைய அன்பின் வழியாக அமைதி, மகிழ்ச்சி மற்றும் தெய்வீக ஞானமாக மாற்றுகிறார். நம்முடைய குறைகள் அவருடைய மன்னிப்பினாலும் மீட்பினாலும் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த விரிசல்களை மூடுவது, நம் ஆன்மாக்களில் அபிஷேகம் மற்றும் ஆசீர்வாதங்களை குவித்து நிரம்பிவழிய வகைசெய்கிறது. நிரம்பி வழியும் போது ஜீவத் தண்ணீர் நம் ஆன்மாவிலிருந்து வெளியேறி, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22 : 1 – 2
” பின்பு பளிங்கைப் போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்கு காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும் நதியின் இருகரையிலும் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவ விருட்சம் இருந்தது. அது மாதம் தோறும் தன் கனியைக் கொடுக்கும். அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். “
பரலோகத் தந்தையே,
நாங்கள் எங்கள் அறியாமையால் உருவாக்க அனுமதித்த , எங்கள் ஆன்மாவிலுள்ள விரிசல்களை ஏற்றுக்கொண்டு, நாங்கள் தாழ்மையுடன் உமது முன்பாக வருகிறோம். ஒவ்வொரு நாளும் நீர் தாராளமாக எங்கள் மீது கொட்டும் ஆசீர்வாதங்களையும் அபிஷேகங்களையும் இந்த விரிசல்கள் இழக்கச் செய்ததை நாங்கள் உணர்கிறோம். சில சமயங்களில், ஜீவத் தண்ணீர் ஏன் நம் ஆத்துமாக்களிலிருந்து அதிகமாகப் பாய்வதில்லை என்பதை நாங்கள் உணர்ந்து அறிக்கையிடுகிறோம். . இன்று, உமது மன்னிப்பையும் இரக்கத்தையும் நாடி உமது முன் தலை வணங்குகிறோம். எங்களுடைய குறைகளுக்காக மனம் வருந்தி உமது தெய்வீகத் தலையீட்டைக் கேட்கிறோம். அநீதியான செயல்கள் மூலமாகவும், தவறான முன்னுரிமைகள் மூலமாகவும், உமது பலத்தை நம்பாமல் எங்கள் பலத்தை நம்பிய தருணங்கள் மூலமாகவும் எங்கள் ஆத்துமாக்களில் நாங்கள் ஏற்படுத்திய விரிசல்களுக்காக, தந்தையே, எங்களை மன்னியும்.
இந்த விரிசல்களைச் சரிசெய்து, உமது ஆசீர்வாதங்களை எங்கள் ஆத்துமாக்களில் பொழியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய தேவைகள் எங்களை விட உமக்கு நன்றாகத் தெரியும் என்று நம்பி, நாங்கள் உமக்கு முன்பாக சமர்ப்பிக்கிறோம். உமது அன்பாலும், மகிழ்ச்சியாலும், அமைதியாலும், ஞானத்தாலும் எங்களை நிரப்பும். உமது அழைப்பை நிறைவேற்ற எங்களுக்குத் தேவையானவற்றால் எங்களை நிறைவாக நிரப்பும். அதன்மூலம் உமது இரக்கத்தின் பாத்திரங்களாகவும், எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒளியையும் அன்பையும் கொடுப்பவர்களாகவும் மாற்றும். எங்களது ஆத்துமாவிலிருந்து ஜீவத் தண்ணீர் பொங்கி பாயட்டும். அவை பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்களின் பாதைகளை உமது ஒளி மற்றும் அன்பின் முழுமையால் ஒளிரச் செய்யட்டும். இவற்றையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் அருமையான நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
Sol. எட்விற்றா.
