நாள்: 25-03-2023
” என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு , நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். “
யோவான் 14 : 2 – 3
இயேசு நம்மைத் தம்முடன் கூட்டிக் கொண்டு போவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தையை நம்பியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இருக்கிற அந்த இடத்திற்கு நம்மை கொண்டு போவதற்குச் சில தகுதிகள் நமக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவே நம்மை இந்த உலகத்தில் விட்டு வைத்திருக்கிறார்.
இந்தத் தகுதியை பெறுவதற்காகவே பலவித சோதனைகளின் பாதைகளை நமக்கு அனுமதிக்கிறார்.
என்னுடைய வாழ்க்கையில் நான் இரட்சிக்கப்பட்ட தொடக்க நாட்களில் கர்த்தர் பலவிதமான சோதனைகளை எனக்கு அனுமதித்தார். திடீரென்று புயல்வீசும்படியான சூழ்நிலை என்னுடைய வாழ்க்கையில் வந்தது. அதே நேரத்தில் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது விசுவாசம்.
அதாவது சந்தேகத்திற்கு இடமில்லாத விசுவாசம் , கேள்வியே கேட்காத விசுவாசம்.என் கணவரும் நானும் என் குடும்ப பிரச்சனைகளுக்கு மத்தியில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டோம். திடீரென்று ஏற்பட்ட அந்த சூழ்நிலையில் என்ன செய்வது ? எங்கே போவது ? எதுவுமே புரியாத , தெரியாத ஒரு நிலை. எங்கள் கையில் இருந்ததோ வெறும் 700 ரூபாய். புதிய வீடு எங்கு பார்ப்பது ஒன்றுமே தெரியவில்லை. வழியே தெரியாத பாதை . ஆனால் இந்த சம்பவத்திற்கு முன்பே கர்த்தர் என்னோடு ஒரு காரியத்தைக் குறித்து பேசினார். நான் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தை செய்யப் போகிறேன். ஆனால் அந்தக் காரியத்தை பெற்றுக் கொள்வதற்கு பொறுமையாக இரு என்பதே.
சங்கீதம் 46 : 10 ” நீங்கள்அமர்ந்திருந்து நானே தேவன் என்று தெரிந்து கொள்ளுங்கள். ”
என்ற இந்த வார்த்தைகள் மூலமாக என்னோடு பேசியிருந்தார். பலவித நெருக்கமான சூழ்நிலைகள் , உறவுகள் எங்களுக்கு எதிராக நின்ற நிலை. இவற்றையெல்லாம் சகித்து நிற்க தேவன் பொறுமையைக் கற்றுக் கொடுத்தார். நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். என் பிரச்சனைகள், சூழ்நிலைகள் எல்லாம் மாறியது. என் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்தார்.
” விசுவாசம் ” என்பது ஒரு ஆயுதம் , அதைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தார்.
எசாயா 41 : 18 ” உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவில் ஊற்றுகளையும் திறந்து , வனாந்தரத்தை தண்ணீர் தடாகமும் , வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி , ” என்ற வார்த்தைகளின்படி நான் கர்த்தரை விசுவாசித்தேன். வாக்குக் கொடுத்தவர் கர்த்தர் என்பதால் அதைப் பெற்றுக் கொள்ளுவோம் என்ற விசுவாசம் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும்.
என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்த எல்லாவற்றையும் கவனமாக பிடித்துக் கொண்டு , அவரை பின் செல்ல வேண்டும் என்ற நிச்சயத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
என்னை அற்புதமாய் நடத்தி வந்த அவரை எப்பொழுது முகமுகமாய் தரிசிப்பேன் என்ற ஆவல் ஒவ்வொரு நாளும் எனக்குள்ளே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஓ என் இயேசுவே , எப்போது உம்மைப் பார்ப்பேன்.ஓ என் இயேசுவே எப்போது உம்மைத் தொடுவேன்.ஓ என் இயேசுவே எப்போது உம்மை அணைப்பேன்.உமக்குப் பிரியமான பரிசுத்த இருதயத்தோடு , உமக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.ஆமென் . அல்லேலூயா.
Sol. ஜோதி குமாரி.
