நாள்: 09-04-2023
“அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.”
யோவான் 10 : 31 – 32
எந்த மரங்கள் அதிக கனி கொடுக்கிறதோ, அந்த மரங்கள் அதிக கல்லெறியப்படும்.
இயேசு குருடர்களை, முடவர்களை, செவிடர்களை, ஊமையானவர்களை, நடக்கமுடியாதவர்களை, சூம்பிய கை உடையவனை, பிசாசு பிடித்த பையனை குணமாக்கினார். பாவிகளை அழைத்து புனிதர்களாக மாற்றினார். மனித குலத்திற்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். யூதர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் இவர்கள் யாவரும் இயேசு செய்த நல்லவற்றைக் காணவில்லை. அவரிடம் குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவே இருந்தார்.
இயேசு எல்லோருக்கும் நன்மை செய்பவராகவே இருந்தார்.
- யூதர்கள் இயேசுவை வெறுத்தார்கள்.
- பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவை பிலாத்துவிடம் கையளித்தார்கள்.
- பிலாத்து இயேசு மீது குற்றம் சுமத்தினார்.
- பேதுரு இயேசுவை மறுதலித்தார்.
- மக்கள் ” சிலுவையில் அவரை அறையுங்கள் ” என்று சத்தமிட்டனர்.படைவீரர்கள் அவரது ஆடையை கழற்றினர்.முள்முடி சூட்டினர்.அவரை கன்னத்தில் அறைந்தனர்.
- கசையால் அடித்தனர்.
- கடைசியாக சிலுவையில் அறைந்தனர்.
நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால் , அவரைப் பின்பற்றிய நிறைய பெண்களை, அவருக்கு நிறைய பணிவிடைகள் செய்த பெண்களைப் பார்க்கலாம்.
சீரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் அவர் சிலுவையை சுமக்க உதவினார்.வெரோணிக்கா அவரது முகத்தைத் துடைத்தாள்.அரிமேதா ஊரைச் சேர்ந்த யோசேப் பிலாத்துவிடம் அவரது உடலை கல்லறையில் அடக்கம் பண்ணக் கேட்டார். மரிய மகதலேனாள், யாக்கோபின் தாய் மரியா ஆகியோர் அவரது உடலில் நறுமணம் பூச கொண்டு வந்தனர்.
நமக்கும் இதே அனுபவங்கள் உண்டு. நாம் மற்றவர்களுக்கு நல்ல இதயத்தோடு, சரியான விருப்பத்தோடு நன்மை செய்யும்போது மற்றவர்களால் குற்றம் சுமத்தப்படுவோம். வெறுக்கப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கேலி செய்யப்படுவோம், அவமானப்படுத்தப்படுவோம், சொற்களால் கல்லெறியப்படுவோம், தவறான குற்றச்சாட்டுகளால் முட்கிரீடம் சூட்டப்படுவோம்…
நாம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்.
அதிகம் பழுத்தவைகள் அதிகமாக கல்லெறியப்படும். நிறைய நேரங்களில் தீமையான செயல்கள் தண்டிக்கப்படாமல் போய்விடும். ஆனால் நம் இதயத்தை தளர விடக்கூடாது. தொடர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும். ஒவ்வொரு நற்செயலுக்கும் வெகுமதி அளிக்கப்படும்.
தம்முடைய கடின நேரங்களில் இயேசுவுடன் இருக்கும் நிறைய மனிதர்களைக் காணலாம். கர்த்தர் அவர்களுடைய கடினமான நேரங்களில் அவர்களுக்கு உதவி செய்ய தூதர்களை அனுப்புவார். இந்த தூதர்கள் நமக்கு உதவி செய்ய, நம்மை கவனித்துக் கொள்ள, நம்மை அன்பு செய்ய, நமக்கு உதவி செய்ய நம் கண்ணீரைத் துடைக்க , நமது சுமைகளைக் குறைக்க, நமக்கு ஆலோசனை கூற, எப்போதும் தயாராக இருப்பார்கள். நாம் நல்லது செய்யும் போது நம்மைத் தட்டிக் கொடுப்பார்கள்.
கலாத்தியர் 6 : 10 சொல்கிறது
” ஆகையால் நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக யாவருக்கும் விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம்.”
ஜெபம்
பரலோகத் தந்தையே, மனிதர்களிடையே நல்லவற்றைக் காணவும் ,தேவையில் இருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய நீட்டுவதற்கு கையை பலப்படுத்தவும் எங்களுக்கு உதவி செய்யும். உமது கருவிகளாக எங்களை பயன்படுத்தும். நாங்கள் தேவையில் இருக்கும் போது எங்களுக்குஉதவி செய்ய தூதர்களை அனுப்பும் . ஆமென்.
Sol. அன்னப்பூ ரெட்டி
